நாடாளுமன்றம்: சூடாறியது குளிர்கால கூட்ட தொடர்
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இன்று காலை லோக்சபா கூடியவுடன் குஜராத் வன்முறை குறித்த விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சிகள் ஒத்தி வைப்புத்தீர்மானம் கொண்டு வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ரூப்சந்த் பால் இந்தத் தீர்மானத்தைத் தந்தார்.
வழக்கமாக இது போன்ற தீர்மானங்களை எதிர்க்கும் ஆளும் பா.ஜ.க. கூட்டணி இம்முறை இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. இந்தத்தீர்மானத்தின் மீது இன்றே விவாதம் தொடங்கியது.
அப்போது பேசிய எதிர்க் கட்சியினர், பா.ஜ.கவையும் சங் பரிவார் அமைப்புகளையும் மிகக் கடுமையாகக் கண்டித்தனர். குஜராத்தில்தேர்தலை மனதில் வைத்து மதக் கலவரத்தை மாநில பா.ஜ.க. அரசே தூண்டுவிட்டதாகவும் அதன்மூலம் அரசியல் லாபத்துக்குஅலைவதாகவும் கூறினர்.
பல மாநிலங்களில் தோற்று வரும் பா.ஜ.கவை அதன் தோல்விகளில் இருந்து காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. போன்றவை மதக்கலவரத்தைத் தூண்டி விட்டு வருவதாக கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதை மறுத்த பா.ஜ.க. எம்.பிக்கள் காங்கிரஸ் தான் மதப் பிரிவினையைத் தூண்டுவதாக புகார் கூறினர்.
இன்னொரு தீர்மானம்:
குஜராத் விவகாரம் தவிர, நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு ஒத்தி வைப்புத்தீர்மானத்தைத் தந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.பல முக்கிய சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற முடியாமல் தொடர்ந்து ஒத்தி வைத்து வந்துள்ளது. அவற்றை இந்தக் கூட்டத் தொடரிலாவதுநிறைவேற்றிவிட மத்திய அரசு முயன்று வருகிறது.
இந் நிலையில் இந்தக் கூட்டத் தொடரை நல்லபடியாக நடத்தும் நோக்கத்துடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று சபாநாயர் மனோகர்ஜோஷி கூட்டியிருந்தார். அதில் பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற எதிர்க் கட்சிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதால் அவை கொண்டு வரும் ஒத்தி வைப்புத்தீர்மானங்களை ஏற்க வேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளப்பட்டுள்ளது.
ராஜ்யசபா ஒத்திவைப்பு:
இன்று கூடிய ராஜ்யசபா உறுப்பினர் நரேந்திர மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்தி வைக்கப்பட்டது. பா.ஜ.கவைச்சேர்ந்த மோகன் செப்டம்பர் 20ம் தேதி காலமானார்.
துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின் பைரோன் சிங் செகாவத் நடத்தும் முதல் ராஜ்யசபைக் கூட்டம் இது தான். இதனால் இன்றுகாலை அவைக்கு வந்த செகாவதுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நமது நாட்டின் துணை ஜனாதிபதி தான் ராஜ்யசபாவின் தலைவர் என்பது நினைவுகூறத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications