ஜெயலலிதாவுக்கு கர்நாடக முதல்வர் பதில் கடிதம்
பெங்களூர்:
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார். இது தொடர்பாகதனக்குக் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழரான அதிமுக எம்.எல்.ஏ. பக்தவச்சலததை சட்டசபை வளாகத்தில் வைத்தே கன்னட வெறியர்கள் தாக்கி கொல்ல முயன்றனர்.இதையடுத்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை கிருஷ்ணாவுக்கு உள்ளதாக ஜெயலலிதா கடிதம்எழுதியிருந்தார்.
இதையடுத்து பக்தவச்சலத்துடன் கிருஷ்ணா தொலைபேசியில் பேசினார். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கிருஷ்ணா எழுதிய பதில் கடிதத்தில்,
அதிமுக எம்.எல்.ஏ. தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடாமல் தடுக்குமாறுபோலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். தாக்கியவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். அவர்கள் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட எம்.எல்.ஏ. பக்தவச்சலத்துடன் நானே தொலைபேசியில் பேசினேன். உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கேயும் அவருடன் பேசினார். அவருக்கு முழுப் பாதுகாப்பு தரப்படும்.
இந்தச் சம்பவம் கர்நாடகத்தின் பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. கர்நாடகத்தில் வசிக்கும் மக்களை பாதுகாக்கவேண்டியது என் கடமை. இங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.
குடிமக்களை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவற மாட்டேன். இவ்வாறு கிருஷ்ணா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
கோலாரில் பந்த்:
இதற்கிடையே எம்.எல்.ஏ. பக்தவச்சலம் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோலார் தங்கவயல் பகுதியில் நேற்று பந்த் நடந்தது.பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன.
-->