தப்பிய நக்சலைட்டுகளை தேட 4 தனிப் படைகள் அமைப்பு
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப் பகுதியில் மறைந்துள்ள 6 நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் 4 தனிப் போலீஸ் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் நடத்திய வேட்டையில் தீவிரவாதிகளின் தலைவனான பார்த்திபன் என்ற சிவாவைப் போலீசார்சுட்டுக் கொன்றனர். மேலும் நான்கு பெண்கள் உள்ளிட்ட 23 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் முக்கிய ரயில், விமான, பஸ் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்க்க அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தது பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் போதுதெரிய வந்தது.
பெரும்பாலும் தெலுங்கில் எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரைபடங்களைத் தான் அந்தத் தீவிரவாதிகள் வைத்திருந்தனர். அவற்றைக் கைப்பற்றியபோலீசார் அவர்களைத் தொடர்ந்து "கவனித்து" வருகின்றனர்.
இந்தத் தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதால் ஏராளமான இளைஞர்கள் இந்தத் தீவிரவாதக் கும்பலிடம் எளிதாகச்சிக்கி விடுகின்றனர். ஆந்திராவில் செயல்படும் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகளிடம் தான் இவர்கள் பயிற்சி பெற்றதாகத்தெரிகிறது.
இந்நிலையில் தப்பியோடிய ஒரு பெண் உள்ளிட்ட ஆறு தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அவர்களைத் தேட 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே பிடிபட்ட 23 தீவிரவாதிகளும் அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
-->