தமிழகத்தில் வயிற்றுப் போக்கு தீவிரம்: 4 பேர் பலி- 100 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை & கும்பகோணம்:
திருவண்ணாமலை மற்றும் கும்பகோணம் அருகே வயிற்றுப் போக்கு காரணமாக ஒரு பெண், 2 சிறுவர்கள் உள்பட4 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே டி. கல்லேரி கிராமத்தில் சமீபத்தில் திடீரென்று 50க்கும் மேற்பட்ட மக்கள் வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டனர்.
இதில் விவசாயியான சின்னமூஞ்சி (60) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கிராம மக்களிடையேபெரும் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் ஐயம்மாள் (58) என்ற பெண் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பிய பின்னர் இறந்தார். இதனால் கிராமமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற 30 பேரும் தனியார்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாகஇருப்பதாகத் தெரிகிறது.
குழாய் வழியாக வரும் குடிநீரில் கழிவு நீரும் கலந்து வருவதாலேயே வயிற்றுப் போக்கு ஏற்படுவதாக கிராமமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து குடிநீர் குழாயைச் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீரைச்சுத்தம் செய்யும் பொருட்டு அதில் குளோரின் கலக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டாக்டர் வடிவேலன் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் குழு கல்லேரி கிராமத்தில் முகாமிட்டு,கிராம மக்களுக்கு தடுப்பு மருந்துகளை அளித்து வருகின்றனர். குடிநீரைக் காய்ச்சி வடிகட்டி பயன்படுத்துமாறும்அவர்கள் கிராம மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கும்பகோணத்தில்...
இதற்கிடையே கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் வயிற்றுப் போக்கு காரணமாக 2 சிறுவர்கள்பரிதாபமாக உயிரிழந்தனர்.
இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகவே ஏராளமான மக்கள் கடும் வயிற்றுப் போக்கு காரணமாக அவதிப்பட்டுவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சுமார் 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் வேலு மற்றும் சரவணன்ஆகிய சிறுவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி கிளம்பியுள்ளது. அங்கு சமீபத்தில் விற்கப்பட்ட இறைச்சியைச்சாப்பிட்டதன் காரணமாகத் தான் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக சிலர் கூறினர். இதையடுத்து அப்பகுதியில்இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதாரஅலுவலர்களும் டாக்டர்களும் அப்பகுதியில் முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டியில்...
இந்த வயிற்றுப் போக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி தொகுதியையும் விட்டு வைக்கவில்லை.
இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேர் வயிற்றுப் போக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல்வர் தொகுதி என்பதால் மருத்துவக் குழுக்கள் அப்பகுதிக்கு துரித கதியில் அனுப்பப்பட்டுள்ளன. சுகாதாரப்பணிகளை டாக்டர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
-->