"சோனியா ஒரு வெள்ளைக் காரி": சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் "சோனியா ஒரு வெள்ளைக் காரி" என்று அதிமுக கவுன்சிலரான வெற்றிவேல்கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. துணை மேயர் கராத்தேதியாகராஜன் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தமாகாவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவிற்குத் தாவிய வெற்றிவேல் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, சோனியாவை வெளிநாட்டுக் காரர் என்றும் வெள்ளைக் காரி என்றும் கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் இதற்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் பதிலுக்குக் கத்தத் தொடங்கவே சபையில் கடும் அமளி ஏற்பட்டது. ஒரேகூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
திமுக உறுப்பினரான ராயபுரம் மனோ எழுந்து, வெற்றிவேலின் பேச்சுக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்றார்.
இதை கராத்தே தியாகராஜன் ஏற்றுக் கொண்டு, வெற்றிவேலின் ஆட்சேபகரமான பேச்சுக்களை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டம் அமைதியாக நடந்தது.
-->