சட்டசபையில் பெரும் கலாட்டா: த.மா.கா.கா. உறுப்பினரை அடிக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ
சென்னை:
சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர்களுக்கும் அதிமுகவின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ்(த.மா.மா.கா.) உறுப்பினர்களுக்கும் இடையே பயங்கர தகராறு மூண்டது.
இதில் த.மா.கா.கா. உறுப்பினர் டாக்டர் குமாரதாசைத் தாக்க முயன்றதாக திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி அவையில் இருந்துவெளியேற்றப்பட்டார். பின்னர் அவரை வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
கருணாநிதியை தாக்கிய குமாரதாஸ்:
இன்று அவை கூடியதும் திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் த.மா.கா.கா உறுப்பினரான குமாரதாஸ். ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நன்றி தெரிவித்துப் பேச அவரை சபாநாயகர் காளிமுத்து அழைத்தார். எழுந்த உடனே சிறிது நேரம் ஜெயாபுகழ் பாடிய குமாரதாஸ் திமுகவையும் காங்கிரசையும் விமர்சிக்க ஆரம்பித்தார்.
திமுக தலைவர் சோமாறி, கழுதை, சோம்பேரி, தைரியம் இல்லாதவர் என்று கேவலமான வார்த்தைகளால் குமாரதாஸ் விமர்சிக்கஆரம்பித்தார்.
அவரது பேச்சு எல்லை மீறவே திமுக உறுப்பினர்கள் கடும் கோபமடைந்தனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று குமாரதாசுக்குஎதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவரது கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
குமாரதாசின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
குமாரதாசுக்கு ஆதரவாய் அதிமுக:
இதையடுத்து குமாரதாசுக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது குமாரதாசுக்கு ஆதரவாக அமைச்சர்களும்அதிமுகவினரும் குரல் தந்தனர். அப்போது திமுக-அதிமுக உறுப்பினர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் மிக ஆவேசமாகக் கத்திக் கொண்டனர்.
ஜெவும் ஆதரவு:
அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, கழுதை என்பது உழைப்புக்கு பேர் போனது. குமாரதாசின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை.அவரது கருத்துக்களை நீக்க வேண்டியதில்லை என்றார். இதைக் காளிமுத்துவும் ஆமோத்தித்தார்.
இதையடுத்து நீங்கள் என்ன ரொம்ப ஒழுங்கா என்று கேட்டவாறு ஜெயலிதாவை நோக்கி திமுகவினர் விரலை நீட்டி திட்டினர்.
இந்த நிலையிலும் குமாரதாஸ் தொடர்ந்து பேசினார். அவர் கூறுகையில், திமுகவுக்குத் தைரியம் இல்லாததால் தான் சாத்தான்குளம்தொகுதியில் போட்டியிடவில்லை என்றார்.
அடிவருடி குமாரதாஸ்:
இதனால் திமுக உறுப்பினர்கள் கடுப்படைந்தனர். அவர்கள் குமாரதாசை நோக்கி ஒருமையில் அழைத்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டினர்.அதிமுகவின் அடிவருடியாக அவர் செயல்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்ட மீண்டும் திமுக- அதிமுக இடையே மோதல் மூண்டது.
அப்போது இடை மறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், அவையில் மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதைவிட்டுவிட்டு குமாரதாஸ் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். இதை எப்படி சபாநாயகர் அனுமதிக்கலாம் என்று கேட்டனர்.
அவர்களுக்கு பதிலளித்த காளிமுத்து சட்டசபையில் அரசியல் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றார். சபாநாயகரின் இந்தப் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளியேற்ற உத்தரவு:
அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக உறுப்பினர்களும் கூட வெளியேறலாம் என்றார்.
இதையடுத்து அவை முன்னவரான அமைச்சர் பொன்னையன் எழுந்து, திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்றும் தீர்மானம் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து திமுகவினரை உடனே வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார்.
அடிக்க முயற்சி:
இந் நிலையில் திமுக- த.மா.மா.கா மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் வலுத்தது. அப்போது குமாரதாசை நோக்கி திமுக உறுப்பினர் பரிதிஇளம்வழுதி ஓடி வந்தார். எங்கள் தலைவரையும், கட்சியையும் நீ எப்படி இவ்வளவு கீழ்த் தரமாக விமர்சிக்கலாம் என்று கேட்டுக் கொண்ட அடிக்கமுயன்றார். அவரை பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரிதியைத் தாக்க சிலர் பாய பதிலுக்கு திமுகவும் பாய்ச்சல் காட்ட ஒரே கலாட்டா மயமானது.
அப்போது உள்ள வந்த அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியே இழுத்துச் சென்றர். அப்போது அதிமுகவினரை நோக்கி அர்ச்சித்தபடி திமுகவினர்வெளியேறினர்.
இன்று மட்டுமல்ல, நாளையும் நாங்கள் அவையைப் புறக்கணிப்போம் என திமுகவினர் கூறினர்.
வெளியேற்றப்பட்ட திமுகவினர் சட்டமன்றத்தின் வெளியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரிதி சஸ்பெண்ட்:
திமுகவினர் வெளியேறியபின் எழுந்த த.மா.மா.கா. மதுரை எம்.எல்.ஏவான ஹக்கீம், எங்கள் கட்சியைச் சேர்ந்த குமாரதாசைத் தாக்க முயன்ற பரிதிஇளம்வழுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும் குமாரதாசையும் பரிதி இளம்வழுதி மிரட்டினார். குமாரதாசை கொல்லப் போவதாகவும் பரிதிமிரட்டினார். இதனால் அவருக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.
இது தொடர்பாக ஒரு புகாரையும் சட்டமன்றத்தில் கொடுத்தார்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் காளிமுத்து, பரிதி இளம் வழுதியை வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.
அப்போது பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிதியமைச்சர் பொன்னையன் கொண்டு வந்தார். அத் தீர்மானம் குரல்ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் மீது சபாநாயகர் தீவிர நடவடிக்கை எடுப்பார் என்று தெரிகிறது.
அவையில் அதிமுக நடந்து கொண்ட விதத்தையும் சபாநாயகரின் தீர்ப்பையும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
காளிமுத்துவின் தீர்ப்பால் விரைவில் கூட உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பரிதி இளம்வழுதி கலந்து கொள்ள முடியாது.
காங்கிரஸை உடைத்து த.மா.கா.காவை அதிமுக உருவாக்கியது நினைவிருக்கலாம்.
-->












Click it and Unblock the Notifications