கோவில் இருந்ததா?: அயோத்தியில் தோண்டும் பணி தொடங்கியது
அயோத்தி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிய நிலத்தைத் தோண்டும்பணி இன்று காலை தொடங்கியது.
இதையடுத்து அயோத்தி நகர் முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானபோலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை ஏற்படலாம் என்று கருதப்படும் அனைத்து இடங்களிலும்போலீசாரை குவித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.
அலகபாத் உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் இந்த தோண்டும்பணியை இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கினர். இந்த இடத்தைச் சுற்றிலும் மத்திய ரிசர்வ் போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் துறை நிபுணர்கள் இந்த இடத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் வீடியோ மற்றும்புகைப்பட காமிராக்களில் பதிவு செய்யப்படுகின்றன.
நேற்று இந்த இடத்தில் சர்வே பணி நடந்தது. அப்போது வக்பு வாரியம், இஸ்லாமி சட்ட வாரியம், விஸ்வ ஹிந்துபரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அங்கிருந்தனர்.
இன்று மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 50 கூலித் தொழிலாளர்களுக்குஅடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே இந்த இடத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் முக்கிய வாதியான முகமது ஹாசிம் அன்சாரி இந்தத் தோண்டும் பணியை அரசியல் நாடகம் என்றுவர்ணித்து, இதன் மூலம் கிடைக்கும் தீர்வையும் ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளியான மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியின் கீழ் உள்ளதொல்பொருள் துறைதான் இந்த அகழ்வாராய்ச்சியை நடத்துகிறது. இதனால் இந்த ஆய்வில் உண்மையான தகவல்கள் வெளிவராது.
அகழ்வாராய்ச்சி நடக்க வேண்டும் என்றால் இந்த இடத்தில் தாற்காலிகமாக கட்டபட்ட கோவிலை ஏன் நீதிமன்றம் அனுமதித்தது. இதேபோல நாளை பிற மசூதிகள் இருக்கும் இடத்தையும் ஆர்.எஸ்.எஸ். தோண்டச் சொல்லும். அதையும் நீதிமன்றம் ஏற்குமா?
மேலும் இந்த ஆய்வுப் பணி தொடங்குவதற்கு முன் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குனரையும் திடீரென மாற்றியுள்ளார் முரளிமனோகர் ஜோஷி என்றார் அவர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிய அகழ்வாராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கடந்த 5ம் தேதி உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், ஒருமாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.