பிளஸ் டூ தேர்வில் காப்பி, பிட், ஆள்மாறாட்டம்
ஊட்டி:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை இணைஇயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.
ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 17ம்தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் வெளியாகிவிடும்.
பள்ளிகளில் தேர்வு சதவீதம் குறைந்தபட்சம் 75 சதவீதம் இருக்க வேண்டும். அதற்கேற்றார் போல தேவையானநடவடிக்கையை பள்ளி நிர்வாகங்கள் எடுக்க வேண்டும் என்றார் அவர்.
காப்பி, பிட், ஆள்மாறாட்டம்...
இதற்கிடையே தமிழகம் முழுவதிலும் பிளஸ் டூ தேர்வுகளின்போது காப்பி அடித்தது, ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 229மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மார்ச் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின்போது 229 மாணவர்கள் பிடிபட்டனர். இதில் கடலூர் மாவட்டத்தில்தான் அதிகஅளவாக 60 மாணவர்கள் பிடிபட்டனர். திருவண்ணாமலையில்43, பெரம்பலூரில் 23, சென்னையில் 20, திருவள்ளூரில் 20 பேரும் பிடிபட்டனர்.
தென் மாவட்டங்களில் மாணவர்களின் நடத்தை திருப்தி தரும் விதமாக இருந்தது. கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கரூர், நாகப்பட்டிணம், நாகர்கோவில்,நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, ஊட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் ஒருவர் கூட பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-->