பிரான்ஸ், ஜெர்மன் கடும் எதிர்ப்பு
பெர்லின்:
ஐ.நா. சபையின் அனுமதியைக் கூடப் பெறாமல் ஈராக்கை தன்னிச்சையாகத் தாக்கும் அமெரிக்காவின் முடிவுக்குஉலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.
இதற்கு பிரான்சும், ஜெர்மனியும் மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஜெர்மன் அதிபர் ஜெராராட்ஸ்ரேடர் அந் நாட்டு தொலைக் காட்சியில் பேசுகையில்,
இது கொஞ்சமும் நியாயமில்லா, ஈவு இரக்கமில்லாத நடவடிக்கை. சதாம் ஹூசேன் என்ற மனிதரால் இந்தஉலகத்துக்கு அவ்வளவு ஆபத்து இருக்கிறதா? இதை அமெரிக்கா உறுதிப்படுத்த முடியுமா?
சதாம் ஹூசேனை ஒழிக்க ஆயிரக்கணக்கான அப்பாவி ஈராக்கிய மக்களை கொன்று குவிக்க வேணடுமா?. இந்தப்போரினால் ஏற்படும் அழிவுகளுக்கு அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையைக் கூடஅமெரிக்கா மதிக்காதா?
கடும் விளைவுகள் ஏற்படும்: பிரான்ஸ்
ஈராக்கை அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாய் தாக்க முடிவு செய்திருப்பதால் மிகக் கடுமையான விளைவுகள்ஏற்படும் என பிரான்ஸ் கூறியுள்ளது.
அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் டி வில்லிபின் கூறுகையில், அமெரிக்க- பிரிட்டன்அரசுகளின் முடிவு மிக துரதிஷ்டவசமானது. இந்தத் தாக்குதலால் வளைகுடாவில் மட்டுமல்ல உலக அளவில்பிரச்சனைகள் வரும்.
ஐ.நா. சபையை எப்படி அமெரிக்கா துச்சமாக மதிக்கலாம்? பெரும்பான்மையான நாடுகளின் முடிவையும் மீறி இத்தாக்குதலுக்கு அமெரிக்கா முயல்வது நல்லதல்ல. இந்த நிலையில் ஐ.நா. எடுக்கும் எந்த முடிவையும் பிரான்ஸ்ஆதரிக்கும் என்றார்.
அமெரிக்காவில் பிரான்ஸ் எதிர்ப்புணர்வு:
ஐ.நாவில் ஈராக்கைத் தாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தவர் வில்லிபின். தனது நாட்டு அதிபர்கைராக்குடன் சேர்ந்து ஐ.நாவில் அமெரிக்காவை தனிமைப்படுத்திக் காட்டினார். பிரான்சின் இந்த முயற்சிக்குஜெர்மன் அதிபர் ஸ்ரேடரும் மிகவும் உதவியாக இருந்தார்.
பிரான்சின் கடும் எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவில் பிரான்ஸ் எதிர்ப்புணர்வு பரவி வருகிறது. பிரான்ஸ்பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம் என பல அமைப்புகள் அறிவித்துள்ளன. வாஷிங்டனில் உள்ள பிரான்ஸ்தூதரகத்தில் முன் கூடிய அமெரிக்கர்கள் பிரஞ்சு ஒயினை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
அரபு லீக் நாடுகளும் எதிர்ப்பு:
இதற்கிடையே ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு அரபு லீக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையை மீறி தன்னிச்சையாக அமெரிக்கா செயல்படுவதும், இன்னொரு நாட்டின் ஆட்சியாளரை நாட்டைவிட்டு ஓட எச்சரிக்கை விடுவதும் நல்லதல்ல என அரபு நாடுகளின் கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.
சீனா கோரிக்கை:
ஈராக் மீதான தாக்குதல் திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட வென் ஜியாபொ கூறுகையில், ஈராக் முழு அளவில்ஒத்துழைக்க வேண்டும். ஈராக் பிரச்சனைக்கு போர் தீர்வல்ல என்றார்.
இந்தியா நம்பிக்கை:
இதற்கிடையே ஈராக்கில் அமைதி நிலவும் என நம்புவதாக பிரதமர் வாஜ்பாய் கூறினார். டெல்லியில் காந்திஅமைதிப் பரிசு வழங்கும் விழாவில் பேசிய அவர்,
நாம் காந்தியைப் பற்றியும் அமைதியைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் சில நாடுகள் சில நாட்டுஆட்சியாளர்களை நாட்டை விட்டு ஓட கெடு விதிக்கின்றன. இது சரியல்ல. ஈராக்கில் அமைதி தான் வெல்லவேண்டும். போர் அல்ல. அங்கு அமைதி நிலவும் என இப்போதும் நம்புகிறேன் என்றார்.
ஆஸ்திரேலியப் படைகளும்...
இந் நிலையில் ஈராக் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கப் படைகளுடன் தனது நாட்டைச் சேர்ந்த 2,000 வீரர்களும்தாக்குதலில் ஈடுபடுவர் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இன்று ஈராக் தூதர்கள் இருவரை ஆஸ்திரேலியாவெளியேற்றியது.
கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு:
வளைகுடாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து இன்று நடக்கும் ஆஸ்திரேலியா- இலங்கை அரையிறுதிப் போட்டிக்கு மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது. மேலும் இனி நடக்கும் அனைத்துப் போட்டிகளும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனசர்வதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
போருக்கு ரஷ்யா எதிர்ப்பு:
இப்போது ஈராக் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியமே இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. ஈராக்கைத் தாக்குவது மிகப் பெரிய தவறு.இதனால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
நாளை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசப் போவதாகவும் ரஷ்ய அதிபரின்செய்தித் தொடர்பாளர் யகோவென்கோ கூறியுள்ளார்.