பொடா சட்டத்தில் 10ம் வகுப்பு மாணவன் கைது: நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை:
தர்மபுரியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்ட பொடாநீதிமன்ற நீதிபதி ராஜேந்திரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் குருசாமி என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் குருசாமியின் மகனான 10ம் வகுப்பு படிக்கும் பிரபாகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.இதை எதிர்த்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலையானார் பிரபாகரன்.
ஆனால் பிரபாகரனுக்கு எதிராகப் பின்னர் பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்துஅவரைக் கைது செய்ய பொடா நீதிமன்ற நீதிபதியான ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பிரபாகரன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தன்னை மீண்டும் கைது செய்தது தவறு என்றும், அதிலும் பொடாசட்டத்தின் கீழ் கைது செய்தது மிகவும் தவறு என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்பிரபாகரன்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத் தன் உத்தரவில் கூறியதாவது:
பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டுள்ளார். 10ம் வகுப்புப் படிக்கும் ஒருமாணவனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய அவர் உத்தரவிட்டது மிகவும் தவறானது.
கிருஷ்ணகிரி நீதிமன்றம் பிரபாகரனுக்கு ஜாமீன் கொடுத்தது சரியான செயல்தான். எனவே உடனடியாகபிரபாகரனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன் என்றார் நீதிபதி சம்பத்.
-->