பட்ஜெட் ஹைலைட்ஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் 2003-04ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல்செய்தார்.
பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:
- மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்த ரூ.22.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் சுமார் 50,000 பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- தொட்டில் குழந்தைத் திட்டம் தொடர்ந்து நடத்தப்படும். புதிய பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக ரூ.14 கோடி ஒதுக்கீடு.
- சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்த திட்டம். குழந்தை ஒன்றுக்கு செலவிடப்படும் 23 பைசா தற்போது 35 பைசாவாக அதிகரிப்பு. தரமான உணவு வகைகளை வழங்குவதற்காக ரூ.20.98 கோடி நிதி ஒதுக்கீடு. மாணவ, மாணவியருக்கு எவர் சில்வர் டம்பளர், தட்டு வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- மூத்த குடி மக்கள் கண்ணியமாக வாழ வகை செய்யப்படும். அவர்களுக்கு வேட்டி, சேலை வழங்க ரூ.16.80 கோடி ஒதுக்கீடு.
- அரசு ஊழியர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கூடுதல் அகவிலைப் படி வழங்கப்படும். 4 சதவீத அகவிலைப் படியில் 3 சதவீதம் ரொக்கமாக, தவணை முறையில் வழங்கப்படும். மீதமுள்ள ஒரு சதவீதம் வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கப்படும்.
- தமிழகம் முழுவதிலும் உள்ள 206 வட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அங்கு ஆன்லைன் வசதி செய்து தரப்படும். மேலும் 600 சார்பதிவாளர் அலுவலகங்கள், 50 பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவை கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இவற்றில் 309 அலுவலகங்களில் இப்பணிகள் முடிந்து விட்டன.
- இடு பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட வரி திரும்பக் கொடுக்கப்படும்.
- மோட்டார் வாகனங்கள் மீதான நுழைவு வரி தொடர்ந்து நீடிக்கும். இருப்பினும் இரட்டை வரி விதிக்கப்படாது.
- நீல நிற மண்ணெண்ணைக்கு 4 சதவீத வரி விகிதம் அப்படியே தொடரும்.
- சலவை இயந்திரங்களுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. நாடா, கழிவுப் பொருட்களுக்கு 4 சதவீத நுழைவு வரி விதிக்கப்படுகிறது.
- அரிசி மீதான விற்பனை வரி விலக்கு தொடர்ந்து நீடிக்கும்.
- தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மீதான ஆடம்பர வரி 1 சதவீதம் என்ற அளவிலிருந்து 3 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. 50 லட்சம் கொண்ட ஆபரண வணிகர்களுக்கு இணக்க வரி ரத்து செய்யப்படுகிறது.
- கேபிள் டிவிக்கும் வரி விதிக்கப்படுகிறது. பஞ்சாயத்து யூனியன் போன்ற ஊராட்சிப் பகுதிகளில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆண்டுக்கு ரூ.12,000 இணக்க வரியாக செலுத்த வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆபரேட்டர்கள் ஆண்டுக்கு ரூ.18,000 செலுத்த வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் ரூ.36,000ம், மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.72,000 வரியும் கட்ட வேண்டும். இவற்றை வசூலிக்கும் உரிமை, ஊராட்சிகளிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றியுள்ளது.
- மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் கேபிள் டிவி இணைப்புகளுக்கு ரூ.5,000 டெபாசிட் தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வழங்க வேண்டும். பிற பகுதிகளுக்கு ரூ.2,500 வசூலிக்கப்படும்.
- மின்சார வரி தொடர்பாக நடப்பு சட்டசபைத் தொடரிலேயே புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படும்.
- 3 காவிரி டெல்டா மாவட்டங்களில் துயர் துடைப்புத் திட்டங்களை மேற்கொள்ள ரூ.164.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
- தென்னை விவசாயிகள் புதிதாக தென்னங்கன்று நட ரூ.30.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சென்னை, திருப்பூரில் ஆடை வடிவமைப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.
- காவல் துறையை நவீனப்படுத்த ரூ.139 கோடி ஒதுக்கீடூ.
- ஓசூர், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் வேளாண் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்.
- சென்னையில் உள்ள மத்திய சிறை, புழல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறைச் சாலைக்கு மாற்றப்படும். இந்தத் திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறனுடைய கடற்கரையோர மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
- தமிழகத்தில் மின் வெட்டு அமல்படுத்தப்படமாட்டாது.
- 2007ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 100 சதவீத மின் வசதி வழங்கப்படும்.
- சாலைகளை மேம்படுத்த ரூ.2,118 கோடி செலவில் சாலைத் துறைத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- சாலை மேம்பாட்டில் தனியார் துறைகளை ஊக்கப்படுத்தத் திட்டம்.
- ரூ.180 கோடி செலவில் 5000 கி.மீ. தூர சாலைகள் மேம்படுத்தப்படும்.
- ரூ.480 கோடி அளவுக்கு வரி விதிப்புகள். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும் என நம்பிக்கை.
- மொத்தத் திட்டச் செலவு: வரவு = ரூ.22,665.90 கோடி, செலவு = ரூ.26,599.37 கோடி. பற்றாக்குறை = ரூ.3933.12 கோடி.












Click it and Unblock the Notifications