ஈராக் தாக்குதலில் அமெரிக்க வீரர் பலி: அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து 12 பேர் பலி
குவைத்:
ஈராக்கியப் படைகள் தாக்கியதில் ஒரு அமெரிக்க வீரர் கொல்லப்பட்டார்.
இன்று பிற்பகலில் நடந்த மோதலில் இவர் கொல்லப்பட்டார். போர் தொடங்கியதில் இருந்து நடந்துள்ள இரண்டாவது அமெரிக்க உயிர்ப்பலி இது. முதலில் ஹெலிகாப்டர் விழுந்தது 12 வீரர்கள் உயிரிழந்தனர்.
குவைத்தில் இருந்து ஈராக்கில் புகுந்துள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈராக்கிய ராணுவத்தினர் தாக்கியதில் இந்த வீரர் இறந்தார். ருமேலியாஎன்ற இடத்தில் நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டார்.
முன்னதாக அல் போ எண்ணெய்க் கிணறைப் பிடிக்கச் சென்றபோது அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர்பலியாயினர். இதில் 4 பேர் அமெரிக்கர்கள், 8 பேர் இங்கிலாந்து வீரர்கள்.
ஈராக் திருப்பி தாக்குகிறது: பிரிட்டன்
தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தீவிரத்துடன் ஈராக் படைகள் திருப்பித் தாக்கி வருவதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஜெப்ஹூன் கூறியுள்ளார்.
அல் போ எண்ணெய்க் கிணறு பகுதியில் ஈராக்கியர்கள் சரணடைந்தாலும் உம் கஸ்ஸர் நகர் அருகே ஈராக்கியர்கள் திருப்பித் தாக்கிவருகின்றனர் என்றார்.
போர் விமானத்தை வீழ்த்தியது:
இதே போல அமெரிக்க போர் விமானம் ஒன்றையும் தங்களது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈராக் அரசு அறிவித்துள்ளது.
வீரர்களுக்கு பரிசு: சதாம் அறிவிப்பு
அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வீரர்களுக்கு 100 மில்லியன் தினார் (ரூ. 17 லட்சம்) பரிசுவழங்கப்படும் என ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் அறிவித்துள்ளார்.
அதே போல அமெரிக்க வீரர்களை சுட்டுக் கொல்லும் வீரனுக்கு ரூ. 8.5 லட்சமும், அமெரிக்க வீரர்களை உயிருடன் பிடித்துக் கொடுத்தால்ரூ. 4 லட்சமும் பரிசாகத் தரப்படும் என ஈராக் தொலைக்காட்சி மூலம் சதாம் அறிவித்துள்ளார்.
பி-52 விமானங்கள் வருகின்றன:
இதற்கிடையே மிகப் பெரும் அளவில் குண்டுகளை அள்ளிச் சென்று வீசும் அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் லண்டன் மற்றும்இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து குவைத்துக்குக் கிளம்பியுள்ளன.
அமெரிக்கர்களை கொல்ல இமாம் அழைப்பு:
இதற்கிடையே இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது கையில் ஏ,கே.-47 துப்பாக்கியுடன் உரையாற்றிய ஈராக் தலைமை இமாம்அப்துல் லத்தீப் ஹோமியேம், உலகெங்கும் அமெரிக்கர்களை இஸ்லாமியர்கள் கொன்று குவிக்க வேண்டும் என்றார்.