மதவெறி தூண்டிய தொகாடியா மீது தேச விரோத வழக்கு
ஆஜ்மீர்:
விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றின் சார்பில் திரிசூலங்களைவினியோகித்து மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் வி.எச்.பியின் தலைவர் பிரவீன்தொகாடியா மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலோட்டின் உத்தரவின்பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீரில் கடந்த 13ம் தேதி வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள தொண்டர்கள் கலந்துகொண்ட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு திரிசூலங்களைவழங்கப் போவதாக விஸ்வ ஹந்து பரிஷத் கூறியிருந்தது.
இதனால் மதக் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஊர்வலத்துக்கு ராஜஸ்தான்போலீசார் தடை விதித்தனர். ஆனால், அந்தத் தடையையும் மீறி ஊர்வலம் சென்ற தொகாடியாதிரிசூங்களை வழங்கியதோடு மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசினார்.
இதையடுத்து தொகாடியாவை ஆஜ்மீர் போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று தொகாடியா மீண்டும் ஆஜ்மீர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜாமீன் கோரி தொகாடியா ஒரு மனு தாக்கல் செய்தார்.
அப்போது ராஜஸ்தான் போலீசார் நீதிமன்றத்திடம் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் மட்டும் தொகாடியா பேசவில்லை. திரிசூலங்களைத் தந்து மாற்றுமதத்தினரைத் தாக்கச் சொல்லி அதன் மூலம் இந்திய தேசத்தின் ஒற்றுமை மீதே அவர் போர்தொடங்கியுள்ளார். அவரது செயல் தேச விரோதமானது. எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாதுஎன்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தொகாடியாவின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார். அவரைத் தொடர்ந்துசிறையில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக வி.எச்.பியின் பொதுச் செயலாளர் கிரிராஜ்கிசோர் அறிவித்துள்ளார்.
தொகாடியாவின் கைதை எதிர்த்து நேற்று ராஜஸ்தானில் பந்த் நடத்த வி.எச்.பி. அழைப்பு விடுத்தது.ஆனால், அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.இதையடுத்து அங்கு குஜராத் ஸ்டைல் மதக் கலவரத்தைத் தூண்டி ஓட்டு வேட்டையாடும் முயற்சிநடந்து வருகிறது. பா.ஜ.கவுக்கு உதவும் வகையில் வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை இந்தசெயல்களில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது.
தொகாடியாவின் கைதுக்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
தொகாடியா மீது 121-ஏ சட்டத்தின் கீழ் தேச விரோத குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கூட விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.