ராணி மேரி கல்லூரி: கட்டட விபத்தில் ஊனமுற்ற மாணவிக்கு ரூ. 9 லட்சம் வழங்கினார் ஜெ.
சென்னை:
12 வருடங்களுக்கு முன் ராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களில் ஒரு கட்டட வராண்டா இடிந்து விழுந்ததில்ஊனமுற்ற மாணவிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று ரூ. 9 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.
ராணி மேரிக் கல்லூரியில் உள்ள எல்லா கட்டடங்களையும் இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்டும் ஜெயலலிதாவின் முயற்சிக்குகடும் எதிர்ப்பு எழுந்தது. இதை இடிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந் நிலையில் கடற்கரைப் பாதுகாப்புச் சட்டப்படி கடற்கரைகளில் உள்ள பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்க மத்திய சுற்றுச்சூழல்துறைஅமைச்சர் டி.ஆர்.பாலு தடை பிறப்பித்தார். இதையடுத்து பாலுவை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந் நிலையில் 12 வருடங்களுக்கு இந்தக் கட்டட விபத்தில் ஊனமுற்ற மாணவி ஷீலாவின் நினைவு ஜெயலலிதாவுக்கு திடீரென வந்தது.உடனே அவருக்கு ரூ. 9 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி இன்று காலை ஷீலாவை கோட்டைக்கு அழைத்த ஜெயலலிதா அவரிடம் ரூ. 9 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.ஊன்றுகோல்களுடன் தான் ஷீலா நடமாடி வருகிறார். நிதியுதவி வழங்கிய ஜெயலலிதா, ஷீலாவிடம் 5 நிமிடங்கள் தனியே பேசிக்கொண்டிருந்தார். பின்னர் ஷீலாவின் நெற்றியில் முத்தமிட்டு அவரை வாழ்த்தினார்.
ஜெயலலிதாவுக்கு ஷீலா தனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு கண்கலங்கினார்.