தமிழகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகராட்சி கமிஷ்னர் விஜய்குமார்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக அனூப் ஜஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து வந்த ரவி, விருதுநகர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இரண்டாவது பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த தேன்மொழி, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் மாற்றம்:
இதுதவிர ஏராளமான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில்
சென்னை மாநகராட்சியின் கமிஷ்னர் கலைவாணனும் அடங்குவார். அவருக்குப் பதிலாக புதிய கமிஷ்னராக விஜயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் பிறகு இதுவரை மொத்தம் 8 முறை சென்னை மாநகராட்சி கமிஷ்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டேனிடா சுகாதாரத் திட்ட இயக்குனராக இருந்து வந்த விஜயக்குமார், கமிஷ்னராகவும் இதுவரை கமிஷ்னராக இருந்து வந்த கலைவாணன் டேனிடா திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயக்குமார், தன்னை இப்பொறுப்பில் நியமித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக சொன்னார்.
சென்னை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட ஆணையர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதமான சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந் நிலையில் நிதானப் போக்குடன் செயல்படும் விஜயக்குமார் புது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.