இந்தியாவுக்கு மீண்டும் தூதரை நியமிக்கிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கான புதிய தூதராக அஜீஸ் அகமத் கானை பாகிஸ்தான் நியமித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது.இதையடுத்து இரு நாட்டு உறவுகளும் மோசமாயின. தூதரை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. ரயில், பஸ்,விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன.
இப்போது உறவு சீரடைந்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு சிவசங்கர் மேனனை இந்தியா தூதராக அறிவித்தது.
இதையடுத்து இப்போது தனது நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக உள்ள அஜீஸ் அகமத் கானைஇந்தியாவுக்கான தூதராக பாகிஸ்தான் நியமித்துள்ளது.
பஸ் சேவை மீணடும் துவக்கம்:
இதற்கிடையே டெல்லி- லாகூர் இடையிலான பஸ் சேவையை மீண்டும் தொடங்க இந்தியா முன் வந்துள்ளது. அதேபோல இந்திய சிறைகளில் உள்ள 70 பாகிஸ்தானிய மீனவர்களும விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர்வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது நாட்டு சிறைகளில் இருந்த 20 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ரயில் போக்குவரத்தும் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.