குடித்து விட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி சஸ்பெண்ட்
சென்னை:
நீதிமன்றத்திற்கு காலதாமதமாக வருவது, குடித்து விட்டு வழக்குகளை விசாரிப்பது ஆகிய புகார்களின் பேரில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி மாணிக்கத்தின் செயல்பாடுகள் குறித்து உளுந்தூர்பேட்டை வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு புகார் அனுப்பப்பட்டது.
அதில், நீதிபதி மாணிக்கம் நீதிமன்றத்திற்கு உரிய நேரத்தில் வருவதில்லை, அப்படியே வந்தாலும், குடித்து விட்டுத்தான் வருகிறார். வழக்கு விசாரணையின்போது வக்கீல்களையும் தரக்குறைவாக
பேசுகிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையில், நீதிபதி மாணிக்கம் மீதான புகாரில் உண்மை இருப்பது கண்காணிப்புப் பிரிவுக்கு தெரியவந்தது. இதை தலைமை நீதிபதியிடம் கண்காணிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக மாணிக்கத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.