மத்திய அரசின் தவறுகளுக்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும்: ப.சிதம்பரம்
சென்னை:
மத்திய அரசின் தவறுகளுக்கும் திமுக பொறுப்பேற்று தான் ஆக வேண்டும் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திராவிட கட்சிகளையே ஒட்டுமொத்தமாக விமர்சித்து வருகிறார் சிதம்பரம். தமிழகத்தின் வளர்ச்சி பின் தங்கியதில் அதிமுகவுடன் சேர்த்து திமுகவுக்கும் பொறுப்புண்டு என்று பேசியிருந்தார்.
இதையடுத்து சிதம்பரம் காங்கிரஸ் காரரே கிடையாது என்றும், கடந்த தேர்கதலில் திமுகவுடன் கூட்டணி வைத்தபோது மட்டும் சிதம்பரத்துக்கு இனித்ததா எனவும் கேட்டிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
இந் நிலையில் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரையில் நடைபெற்ற காமராஜர் நூற்றாண்டு விழாவில் நான் பேசியது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்தேன்.
திமுகவை விமர்சனம் செய்வதற்கு எங்களுக்கு உரிமையிருப்பதைப்போல காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை விமர்சனம் செய்வதற்கு அவருக்கும் உரிமையிருக்கிறது.
ஆகவே, அவருடைய விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், கலைஞருடைய அறிக்கையில் அவர் சொல்ல மறந்துவிட்ட ஒரு உண்மையை நான் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
திமுக ஒரு எதிர்க்கட்சி என்றும், எதிர்க்கட்சியான திமுகவை இன்னொரு எதிர்க் கட்சியான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை ஏன் விமர்சிக்கிறது என்றும் கலைஞர் வினா எழுப்பியுள்ளார்.
திமுக தமிழ்நாட்டில் ஓர் எதிர்க்கட்சி என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். மத்திய அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள், முடிவுகள், தடுமாற்றங்கள், தோல்விகள் ஆகிய அனைத்துக்கும் திமுகவும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அயோத்தியில் ராமர் கோவில், பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற இயலாமை, பொடா சட்டத்தை நிறைவேற்றியது, பொடா சட்டத்தின் துஷ்பிரயோகத்தை தடுக்க இயலாமை, பொருளாதார மந்த நிலை ஆகிய பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மத்திய அரசை விமர்சிக்கிறோம்.
அப்படி விமர்சிக்கும் போது திமுகவையும் விமர்சிப்பதை தவிர்க்க முடியாது. அதுவுமின்றி, பாரதிய ஜனதா கட்சி அரசை திமுக கூட்டணியில் இருந்து கொண்டு ஆதரிக்கிறது. அதிமுக வெளியிலிருந்து ஆதரிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
காங்கிரஸ் ஜனாநாயகப் பேரவை மேடையிலிருந்து நாங்கள் அதிமுக அரசை வன்மையாக, ஆனால் கண்ணியமாக விமர்ச்சிக்கிறோம். திமுகவை மென்மையாக, ஆனால் கண்ணியமாக விமர்சிக்கிறோம்.
ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற விமர்சனங்களில் எந்த தவறும் இல்லை என்று கருதுகிறோம்.
இவ்வாறு சிதம்பரம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications