கர்நாடகத்திலிருந்து 4 தமிழக கொத்தடிமைகள் மீட்பு
தூத்துக்குடி:
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள கடையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த திருச்செந்தூரைச்சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.
திருச்செந்தூரைச் சேர்ந்தவர்கள் பெருமாள், கிருஷ்ணன், முருகன், திருமுருகன். இவர்கள் நான்கு வேலை தேடிகர்நாடகம் சென்றனர்.
குல்பர்காவில் இவர்கள் ஒரு மொத்த விற்பனைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தனர். ஆனால், இவர்களை அந்தக்கடை உரிமையாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தி வந்தனர்.
ஊதியம் ஏதும் தராமல் கடையின் கிட்டங்கியிலயே அடைத்து வைத்து தொடர்ந்து வேலை வாங்கி வந்துள்ளனர்.
இது தொடர்பாக மிகவும் சிரமத்துக்கு இடையே தங்கள் குடும்பத்தினருக்கு இவர்கள் கடிதம் மூலம் தெரிவித்தனர்.இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமனிடம் இவர்களது குடும்பத்தினர் உதவி கோரினர்.
இதைத் தொடர்ந்து 4 பேரையும் மீட்க ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். வழக்கறிஞர் அழகு மணி என்பவர்இதற்காக குல்பர்கா அனுப்பப்பட்டார்.
அங்கு கடை உரிமையாளர்களிடம் போயப் பேசிய அழகுமணி, வழக்குப் போடுவோம் என எச்சரித்து இந்த 4பேரையும் மீட்டு மதுரைககு அழைத்து வந்தார்.
பின்னர் அவர்கள் திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
4 பேருக்கும் நிவாரண உதவி வழங்கவும் ஆட்சித் தலைவர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.