உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல்- தலைமைச் செயலர் டெல்லி விரைவு
டெல்லி:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 35,000 ஊழியர்களை பணியில் சேர்க்காத தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ மற்றும் வழக்கறிஞர் நளினிசிதம்பரம் ஆகியோரது சார்பில் இன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 2,200 பேர் தவிர மற்ற அனைவரையும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கடந்த24ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் 2,200 பேர் தவிர, மேலும் 35,000 பேர் வரை பணியில் சேர அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசின் இந்த முடிவை எதிர்த்தும், 2,200 பேர் தவிர மற்ற அனைவரையும் பணியில் சேர்க்கக் கோரியும் தொ.மு.ச,சி.ஐ.டியூ. ஆகியவற்றின் சார்பில் இன்று புதிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்டன.
மேலும் ஊழியர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர் நளினி சிதம்பரமும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதுதவிர பாதிக்கப்பட்ட ஊழியர்களில் 5 பேர் தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளக் கோரி நாளைமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தலைமைச் செயலாளர் டெல்லி விரைவு:
இதற்கிடையே தமிழக அரசின் தலைைச் செயலாளர் லட்சுமி பிரனேஷ் இன்று திடீரென டெல்லி விரைந்தார்.அவருடன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனும் டெல்லி சென்றார்.
தமிழக அரசுக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதால் அதற்கு எதிராக வாதங்களை எடுத்து வைக்க மூத்தவழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுடன் இவர்கள் விவாதிக்கு வருகின்றனர்.