வீரப்பனுக்கு "வீஸிங்"? .. அதிரடிப்படை வேட்டை தீவிரம்
ஈரோடு
தாளவாடி காட்டுப் பகுதியில் மழை பெய்து கொண்டிருப்பதால், அதிக குளிர் மற்றும் மழை காரணமாக சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு ஆஸ்துமா பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சுத் திணறல் (வீஸிங்) காரணமாக அதிகதூரம் நடக்க முடியாமல் அவஸ்தைப்படுவதாக காட்டுப் பகுதி கிராமவாசிகள் தகவல் தந்துள்ளனர்.
இதையடுத்து அதிரடிப்படையினரின் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வீரப்பனுக்கு ஆஸ்துமா பிரச்சினை உள்ளது. மழைக் காலங்களில் அவன் மூச்சுத் திணறலால் அவஸ்தைப்படுவதுவழக்கம். இந்த முறை அவனுக்கு ஆஸ்துமா பிரச்சினை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகவும், இதனால் நீண்டதூரம் நடக்க முடியாமல் அவஸ்தைப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதனால் தாளவாடி மலைப் பகுதியில் தான் வீரப்பன் பதுங்கியுள்ளதாக அதிரப்படை கருதுகிறது. இதையடுத்துகர்நாடகத்தைச் சேர்ந்த 1,500 அதிரடிப்படை வீரர்கள் அங்கு முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளனர்.
ஆடி அமாவாசை பயம்:
அதே நேரத்தில், இன்று ஆடி அமாவசை இரவு என்பதால் ஏதாவது ஒரு வகையில் வீரப்பன் தனது கைவரிசையை காட்டக்கூடும்என்ற பயமும் அதிரடிப் படையினரிடம் பரவியுள்ளது.
ஆடி அமாவாசை நாளில் தான் நடிகர் ராஜ்குமார், நாகப்பா, கர்நாடகா வனத்துறையினர் ஒன்பது பேர் கடத்தி செல்லப்பட்டனர். இந்தநாளை வீரப்பன் தனக்கு மிக லக்கியான நாளாக நினைப்பனாம்.
இதனால் மலைப்பகுதி காவல் நிலையங்கள், வி.ஐ.பி.க்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஆடி அமாவாசை என்பதால், வீரப்பன் கும்பல் மீண்டும் ஒரு ஆள் கடத்தல் அல்லது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடலாம்என்று வனப் பகுதி கிராமத்தினரும் கூறி வருகின்றனர்.