அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடவே கூடாது. அதற்கு சட்டப் பூர்வமாகவோ, தார்மீகரீதியிலோ எந்தஅடிப்படை உரிமையும் அவர்களுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியது.இதனால் இனி நாடு முழுவதுமே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்ட விரோதமாகிறது.
தமிழக அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்ததீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடுத்தனர்.
இதில் சுமார், 6.000 பேர் தவிர மற்றவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும், இவர்கள் மீதான வழக்குகளைவிசாரிக்க 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட கமிட்டியை அமைக்கவும் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 2,799 அதிகாரிகளின் டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்து அவர்களை சஸ்பெண்ட்செய்யப்பட்டவர்களாக கருத உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் ஷா மற்றும் லட்சுமணன் ஆகியோர் இறுதித் தீர்ப்பை வழங்கினர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய சட்டப்பூர்வ உரிமையோ அல்லது தார்மீக உரிமையோ இல்லை. 8,063ஊழியர்களையும் பணிக்கு சேர்த்துக் கொள்வதாக தமிழக அரசு உறுதி கூறியுள்ளது. அந்த ஊழியர்களுக்கு ஜூலைமாதம் 25ம் தேதி முதல் சம்பளம் கொடுக்க வேண்டும்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 ஊழியர்களின் வழக்கை விசாரிக்கவுள்ள 3 நீதிபதிகளின்தீர்ப்பை தமிழக அரசு ஏற்க வேண்டும். அந்தத் தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால், தீர்ப்பாயம் இயங்காத பட்சத்தில்,உயர் நீதிமன்றத்தை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அணுகி தீர்வு காணலாம்.
எஸ்மா மற்றும் அவசரச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
தொழிற் சங்கங்களுக்குக் கூட வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க எந்த உரிமையும் இல்லை. எந்த ஒருஅரசியல் கட்சிக்கும், அமைப்புக்கும் வேலை நிறுத்தம் நடத்த சட்டரீதியாக எந்த அடிப்படை உரிமையும் இல்லை.
ஸ்டிரைக்குக்கு அழைப்பு விடுத்து மாநிலத்தின் அல்லது நாட்டின் பொருளாதார, தொழில்துறை நடவடிக்கைகளைசீர்குலைப்பதும், பொது மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதும் பெரும் குற்றமாகும்.
கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள பலவிதமான முறைகள் உள்ளன. போராட்டம், வேலை நிறுத்தம் என்றபெயரில் குழப்பத்தையும் நிர்வாக சீர்கேட்டையும் யாரும் விளைவிக்கக் கூடாது என்று கூறினர்.
முன்னதாக நேற்று தங்களது இடைக்காலத் தீர்ப்பின்போது பேசிய நீதிபதிகள், டிஸ்மிஸ் செய்யப்பட்டு வேலையில்சேர்க்கப்படாத 14,135 பேரில் 8,063 பேரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள தமிழக அரசு முன் வந்துள்ளதுவரவேற்புக்குரியது. இந்த விஷயத்தில் நாங்கள் கருணை காட்டவில்லை. தமிழக அரசு தான் கருணை காட்டியது.இதற்காக அந்த அரசைப் பாராட்டுகிறோம் என்றனர்.
அதே நேரத்தில் மீதமுள் 6,072 ஊழியர்களில் சுமார் 3,000 பேர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்துஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு முடிவு செய்யும் என்றனர். இதனால் மற்ற 3,000 பேரின் டிஸ்மிஸ் செல்லும் என்றுஉச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாகவே அர்த்தம். இதனால் அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்காது.