கர்நாடக அமைச்சர், எம்எல்ஏ மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா, சந்தன வீரப்பனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர்ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டிய கர்நாடக அமைச்சர் அல்லம் வீரபத்ரப்பா மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏவானசிந்தியா ஆகியோர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
நாகப்பா கடத்தப்ப நிலையில், அப்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அல்லம் வீரபத்ரப்பா, நாகப்பாவைமீட்க தமிழக முதல்வர் உரிய முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
பின்னர் அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை இழந்தார். இப்போது முதல்வர் கிருஷ்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார்.
நாகப்பா கடத்தல் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்டதாக இப்போது அவர் மீது தமிழக அரசு வழக்குத்தொடர்ந்துள்ளது. சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அல்லம் வீரபத்ரப்பா மீது இந்த அவதூறு வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கர்நாடக முன்னாள் அமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமானபி.ஜி.ஆர்.சிந்தியா மீதும் இதே விவகாரத்தில் அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
நாகப்பா மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்கவேண்டும் என்று இவர் கூறியதனால் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த இரு அவதூறு வழக்குகளையும் நீதிபதி ஜெயபால் விசாரித்தார். இதையடுத்து அமைச்சர் அல்லம் வீரபத்ரப்பாவுக்கும்,சிந்தியாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்குகளின் விசாரணை அக்டோபர் மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
தமிழக பத்திரிக்கைகள், காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது தான் இதுவரை தமிழகஅரசு அவதூறு வழக்குகள் போட்டு வந்தது. இப்போது மாநிலம் தாண்டி கர்நாடக அரசியல்வாதி, அமைச்சர் மீதும் வழக்குதொடர்ந்துள்ளது.