தமிழகத்தில் மதக் கலவரங்களை உருவாக்க அதிமுக சதி: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
தமிழகத்தில், மதக் கலவரங்களை உருவாக்க அதிமுக அரசு சதி செய்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்ட திமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் பங்கேற்ற கருணாநிதி, பின்னர்சென்னையில் நடந்த தென் சென்னை மாவட்ட தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அமைந்தகரையில் நடந்த இந்த கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தி வருவோர் இன்று மதவாதிகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முடிவுரை எழுத வேண்டாமா? இந்து மதத்தைப் பரப்புவதில், பா.ஜ.க,வி.எச்.பி. ஆகியவற்றை விட ஜெயலலிதாதான் வேகமாக இயங்கி வருகிறார்.
எந்த மதத்தையும் பரப்புவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அதற்காக மற்ற மதத்தினரை ஒடுக்கலாம், அழிக்கலாம்,மிரட்டலாம் என்று கூறக் கூடாது. தமிழகத்தில் இன்று அதுதான் நடக்கிறது.
சிறுபான்மை மதத்தினரை மிரட்டுவதும், ஒடுக்குவதும் நடந்து வருகிறது. இதன் மூலம் மதங்களுக்குள் மோதலைஏற்படுத்தி, மதக் கலவரங்களை உருவாக்க அதிமுக அரசு சதி செய்து வருகிறது.
நாங்கள் வியாபாரிகளை மிரட்டி நிதி வசூல் செய்வதாக அதிமுகவினர் கூறுகிறார்கள். ஆமாம், மிரட்டித்தான்வசூலித்து வருகிறோம். எப்படி? இருப்பதைக் கொடு, இயன்றதைக் கொடு, இல்லாவிட்டால் ஜெயலலிதா ஆட்சிமீண்டும் வந்து விடும் என்று மிரட்டித்தான் நிதி வசூல் செய்து வருகிறோம்.
சீரணி அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல இடிப்புகள் காத்திருப்பதாகப் பேசப்படுகிறது. திமுக மீண்டும்ஆட்சிக்கு வந்தால் சீரணி அரங்கம் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும்.
காவல் துறைக்கு கடந்த திமுக ஆட்சியில் எத்தனையோ சலுகைகள் தரப்பட்டன. அவற்றையெல்லாம் மறந்து விட்டுதிமுகவினர் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள். காவல் துறையினருக்கு வேண்டுகோள்விடுப்பதெல்லாம் செய்த உதவிகளை நினைத்துப் பாருங்கள் என்பதுதான் என்றார் கருணாநிதி.
அக் கூட்டத்தில் தென்சென்னை, வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் ரூ. 3.5 கோடி நிதிகருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.