புகை கக்கும் சென்னை டவுன் பஸ்களுக்கு எதிராக பொது நல வழக்கு
சென்னை:
சென்னை நகர அரசு பஸ்கள் அதிக புகையை வெளியிடுவதாகவும், அச்சமூட்டும் வகையில் மிக வேகமாச்செல்வதாகவும் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாணிஸ்ரீ என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில்,
சென்னை நகர டவுன் பஸ்கள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. ஓட்டை உடைசலாகவே உள்ளன. மிகஅதிகமான புகையைக் கக்கிக் கொண்டு ஒடும் பஸ்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, பொது மக்களும் அதிகஅளவில் அவஸ்தைப்படுகின்றனர்.
மேலும், டிரைவர்கள் அதி வேகமாக பஸ்களை ஓட்டுவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. நிறுத்தங்களில்கூட பஸ்களை டிரைவர்கள் நிறுத்துவதில்லை.
இதுதவிர, பெரும்பாலான பஸ்களில் பயணிகள் ஏறி, இறங்குவதற்கான வசதியான வகையில் படிக்கட்டுக்கள்இல்லை, சில பஸ்களில் பஸ்சின் நடுப்பகுதியில் ஏறி, இறங்குவதற்கான வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே இந்தக் குறைகளைச் சரி செய்யுமாறு போக்குவரத்துக்கழகத்திற்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் வாணிஸ்ரீ.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற முதலாவது பெஞ்ச் நீதிபதிகளான தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும்நீதிபதி ஏ.கே.ராஜன் ஆகியோர் இது தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு போக்குவரத்துத் துறைச்செயலாளர், அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.