தோல்வி தான் ஜெவுக்கு பாடம் கற்பிக்க முடியும்: ராமதாஸ்
திண்டிவனம்:
ஜெயலலிதாவுக்கு தோல்வி தான் பாடம் கற்றுக் கொடுக்கும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து ஏதாவது குளறுபடிகள் நடந்தவண்ணம் உள்ளன. அதில் லேட்டஸ்ட் தான் கெளரவரேசன் அட்டை. ரூ. 5,000 மாத ஊதியம் உள்ளவர்களை வசதி படைத்தவர்கள் என்று இந்த அரசு கூறுகிறது.
மேலும், ரேசன் அட்டைகளை தாங்களே கொண்டு வந்து காட்டி முத்திரையும் வாங்கி அதை கெளர ரேசன் கார்டாகமாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதைவிடக் கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா?.
இந்தத் திட்டத்தால் 75 லட்சம் பேருக்கு ரேசனில் ஏதும் கிடைக்காது. இதனால் 3ல் ஒரு ரேசன் கடையே காணாமல்போகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. சுமார் 15,000 ரேசன் கடை தொழிலாளர்கள் வேலை இழக்கப் போகிறார்கள்.
மாத வருமானம் ரூ. 15,000 இருந்தால் தான் ஏதோ நல்ல வாழ்க்கை வாழ முடியும். இதனால் இந்த வருமானவரம்பை ரூ. 5,000ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்த வேண்டும். இந்த மாதிரி யோசனை சொன்னல் அதைஅதிமுக அரசு காதில் வாங்காது. சிலருக்கு தோல்வி தான் பாடம் கற்றுக் கொடுக்க முடியும்.
மக்களின் வேதனை தான் அதிமுக அரசின் சாதனை என்றாகிவிட்டது.
காவிரி விஷயத்தில் பேச்சு கிடையாது என்று சொல்லி கடும் நிலையை ஜெயலலிதா எடுத்தார். அப்படிப்பட்டநிலையை எடுத்தவர் நீரைப் பெற ஏதாவது விசேஷ முயற்சியை எடுத்தாரா என்றால் இல்லை. இது தமிழகமக்களுக்கு ஜெயலலிதா செய்துள்ள மிகப் பெரிய துரோகம். காவிரிப் பிரச்சனைக்கும் தனக்கும் சம்பந்தமில்லைஎன்பது மாதிரி ஜெயலலிதா செயல்படுவது நல்லதல்ல.
பொறியியல் கல்லூரிகளில் வசதி படைத்த மாணவர்கள் எல்லாம் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துவிட்டனர்.ஆனால், தகுதியிருந்தும் அரசு நிர்ணயித்த ரூ. 30,000த்தைக் கட்ட முடியாத மாணவர்கள் கல்லூரிகளில் சேரமுடியாமல் நொந்து போய் உள்ளனர். அண்டை மாநிலங்களில் அரசு கட்டணத்தைக் குறைக்கிறது. ஆனால்,இங்கோ அது நடக்கவில்லை.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு ஒரு 5 ஆண்டுக்காவது தடை விதித்துவிட்டால்நல்லது போலத் தோன்றுகிறது. அவ்வளவு மட்டமான படங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஆபாசத்தைஅடிப்படையாக வைத்து இயங்கும் வெளிநாட்டு சேனல்களையும் ஒட்டுமொத்தமாக தடை செய்துவிடுவது நல்லதுஎன்றார் ராமதாஸ்.