ரஜினி விஜய் பற்றி சொன்னதற்கு வெளிப்படையாக ரியாக்ட் செய்த துரை வைகோ.. "மக்கள் தீர்ப்பை மதிக்கணும்”!
சென்னை: "விஜய் முதலமைச்சரானதற்கு 100 சதவீதம் சினிமா தான் காரணம் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்; அதைச் சிறுமைப்படுத்தக் கூடாது" என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி பேசியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ பேசுகையில், "தமிழக அமைச்சர்கள் இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை. மீதமுள்ள துறைகளுக்கான அமைச்சர்கள் எப்போது நியமிக்கப்படப் போகிறார்கள் என்பதை முதலமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். அரசுத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர்வதற்கு விரைவில் துறை ரீதியான அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும். புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் செயல்பட உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.

நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் முதலமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றை அவர் எவ்வாறு நிறைவேற்றுவார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சினிமாவுலதான் நீங்க இந்த மாதிரி மிராக்கிள்ஸ் பார்க்கமுடியும். புதிதாக யார் வந்தாலும் கால அவகாசம் தர வேண்டும். எனவே, ஆறு மாதங்கள் கழித்துதான் அவரது செயல்பாடுகள் குறித்துக் கருத்து கூற முடியும்.
முதலமைச்சர் விஜய், 'தவெக அரசு குதிரை பேர அரசு அல்ல; குதிரை வேகத்திலான அரசு' எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் செயல்படுவாரா என்று பார்க்க வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுகவில் ஒரு பிரிவினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
அதிமுகவில் நடப்பது உட்கட்சிப் பிரச்சினை என்பதால், அது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதற்குள் நான் போக விரும்பவில்லை. டி.டி.வி. தினகரன் இதனைத் 'குதிரை பேரம்' எனக் கூறியுள்ளார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. சட்டமன்றத்தில் விஜய்க்கு 140-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என விஜய் கூறியுள்ளார். அதனை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேள்வி கேட்போம். 'விஜய் முதலமைச்சரானதற்கு 100 சதவீதம் சினிமா தான் காரணம்' என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்; அதைச் சிறுமைப்படுத்தக் கூடாது.
தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கை தான் அவசியம். தமிழர்கள் உலக அளவில் பல்வேறு நாடுகளில் சிறந்து விளங்க இருமொழிக் கொள்கை தான் காரணம். நாம் இந்திக்கு எதிரானவர்கள் கிடையாது. மொழித் திணிப்பிற்கு மட்டுமே எதிரானவர்கள். திமுக கடந்த முறை போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடக் கோருவது குறித்த கேள்வி முறையற்றது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications