விவசாயியை துப்பாக்கியால் சுட்ட பஞ்சாயத்துத் தலைவர் கைது
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நேற்று முன் தினம் நடந்த பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இது தொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முரளி. இதே கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி.
இந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் ராஜா. இவரது வீட்டில் ராமமூர்த்தி வேலை பார்த்து வருகிறார்.சில மாதங்கள் முன் ராமமூர்த்தி, முரளியிடம் கடன் வாங்கியிருந்தாராம். நீண்ட நாளாகியும் அதை திருப்பி தர வில்லை.
சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் இருந்த ராமமூர்த்தியிடம் முரளி கடனைக் கேட்டார்.
அப்போது அங்கு வந்த பஞ்சாயத்துத் தலைவர் ராஜா என் வீட்டில் வந்து ராமமூர்த்தியிடம் ஏன் தகராறு செய்கிறாய்? என்று முரளியிடம் கேட்டார். இதில் முரளிக்கும் பஞ்சாயத்துத் தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராஜா உள்ளே சென்று துப்பாக்கியோடு வந்து முரளியை சுட்டார். இதை சற்றும் எதிர்பாரக்காத முரளி குண்டிலிருந்து தப்ப தலையைக் குனிந்தார். அப்போது குண்டு முரளியின் கையில் பாய்ந்தது. காயத்துடன் முரளி தரையில் விழுந்தார்.
உடனே அங்கிருந்து ராஜாவும், ராமமூர்த்தியும் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த முசிறி டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீஸ் படை விரைந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முரளியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கியால் சுட்ட பஞ்சாயத்துத் தலைவர் ராஜாவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications