இடிபடப் போகும் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதி
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்களின் விடுதிகள்உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளன. இதையடுத்து விடுதிகளில் இருந்து மாணவர்கள்வெளியேற்றப்படுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கோட்டூர்புரம் பகுதியில் உள்ள 43 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையவுள்ளது. இதற்காக வரும் 30ம் தேதி பூமி பூஜை நடத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. இங்கு ரூ.430 கோடி செலவில் தலைமைச் செயலகம் கட்டப்படுகிறது.
இதற்காக பல்கலைக்கழகத்துக்குள் உள்ள மாணவர் விடுதி இடிக்கப்படவுள்ளது. இங்கு 320 மாணவர்கள்தங்கியுள்ளனர். இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனர்.
மாணவர்களை எங்கே தங்க வைப்பது என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுகாலியாக உள்ள வீடுகளில் தங்க வைக்கலாமா என்று அரசுத் தரப்பில் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதுசரிப்பட்டு வராது என்று பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பெரும்பாலான வீட்டு வசதி குடியிருப்புகளில் தண்ணீர் வராது, மழை பெய்தால் ஒழுகும், கழிவு நீர் வெளியேறுதில்சிக்கல் என பிரச்சனைகள் உள்ளன. இருப்பினும் மாணவர்களை வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்குஅனுப்புவதில் அரசு தீவிரமாக உள்ளது.
அடுத்த கல்வியாண்டுக்குள் இவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திலேயே வேறு இடத்தில் விடுதி கட்டித்தரப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
ஏற்கனவே, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா ஜெம் அறிவியல் பள்ளி முற்றிலுமாக இடிக்கப்படும் நிலைஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளி எந்த இடத்திற்கு மாற்றப்படவுள்ளது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளநிலையில், அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த விடுதி தவிர வேறு சில கட்டடங்கள் மீது கை வைக்கப்படும் என்று தெரிகிறது. பொருளாதாரப் பிரிவுகட்டடத்தை இடித்துவிட்டு அதை கிண்டியில் ஹைவே துறைக்கு சொந்தமான இடத்துக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.