ஜனனி, ரமீஜாவிடம் குற்றப் பத்திரிக்கை
மதுரை:
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோருக்கு மதுரைநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
கஞ்சா வழக்கில் கைதாகி திருச்சி சிறையில், அடைக்கப்பட்டுள்ள ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிக்கைநகல்களை வழங்க நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார்.
ஆனால் குற்றப் பத்திரிக்கையை வாங்க மூன்று பேரும் மறுப்பு தெரிவித்தனர். இதற்கான காரணம் என்ன என்றுநீதிபதி அவர்களிடம் கேட்டார்.
அப்போது சதீஷ், குற்றப் பத்திரிக்கை நகலை பெற கால அவகாசம் தேவை என்று கோரி மனுத்தாக்கல்செய்தார்.இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து மூவரும் தங்களது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்திய பின் குற்றப்பத்திரிக்கை நகல்களைப்பெறுவதற்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.அதைப் பெற்றபோது ஜனனி, ரமீஜாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.
32 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், 14 ஆவணங்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் 8சி2இ, 20பி2சி மற்றும் 27ஏ, 29ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.