சப் இன்ஸ்பெக்டர் "சென்ட்ரீ" ஆனார்: எஸ்.பி. கொடுத்த தண்டனை!
சேலம்:
புகார் மனுவை வாங்க மறுத்ததால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய வாசலில் சென்ட்ரீ ஆக நிற்குமாறு சப்இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல் நூதனதண்டனை கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் காவல் நிலையதிற்கு ராணி என்பவர் வந்துள்ளார். தனதுகணவர் வீட்டார் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி மனு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவரது புகார் மனுவை சப் இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் வாங்க மறுத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்துமூன்று முறை புகார் கொடுக்க முயன்றும் அதை சப் இன்ஸ்பெக்டர் வாங்க மறுத்து ராணியைக் கடுமையாகத் திட்டிதிருப்பி அனுப்பி விட்டார்.
இதனால் மனம் வெறுத்த ராணி, சேலத்தில், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல்நடத்தும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்குச் சென்றார். அங்கு கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
ராணி கூறியதைக் கேட்ட பொன் மாணிக்கவேல் அங்கிருந்து வயர்லஸ் மூலம் பெரியநாயகத்தைத் தொடர்புகொண்டார். புகாரை வாங்க மறுத்ததற்கான காரணத்தைக் கேட்டார். ஆனால் பெயநாயகம் மழுப்பலான பதில்கூறவே, மறு உத்தரவு வரும் வரை காவல் நிலையத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்தியபடி, சென்ட்ரீ ஆக நிற்குமாறுகூறி உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக சப் இன்ஸ்பெக்டர் பெரியநாயகம், சென்ட்ரீ ஆக நின்று கொண்டுள்ளார்.காவல் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேலின் இந்த அதிரடி உத்தரவு, சேலம் காவல்துறை வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி அதிகாரி பொன் மாணிக்கவேலு என்றால் குற்றவாளிகளுக்கு மட்டுமல்லாமல், காவலர்களுக்கும் பெரும்பீதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.