இந்தியாவிடம் ஹெலிகாப்டர்கள் வாங்கும் அமெரிக்கா!
பெங்களூர்:
இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஏ.எல்.எச். ரக ஹெலிகாப்டர்களை வாங்க (Advanced Light Helicopters) அமெரிக்கா முன் வந்துள்ளது.
அமெரிக்காவின் கஸ்டம்ஸ் துறைக்கு 10 ஏ.எல்.எச். ஹெலிகாப்டர்கள் விற்கப்படவுள்ளன. இதற்காக அந் நாட்டுக் குழு பெங்களூர் வருகிறது. இஸ்ரேல் விமானத்துறையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை கூட்டாகத் தயாரித்து அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளன.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்த இந்த ஹெலிகாப்டர்கள் இப்போது இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படையால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறிய ரக, மிக அதிக சக்தி வாய்ந்த ஹெலிகாப்டர் இது. சுமார் 6 கி.மீ. உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது. துருவ் என்று அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டரில் பிரான்ஸ் நாட்டின் டப்போமெகா என்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
நொடிக்கு 9 மீட்டர் உயரம் உயரக் கூடியது. அதிகபட்சம் தொடர்ந்து 400 கி.மீ. வரை பயனிக்கும்.