கற்பக விநாயகம் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு திமுக கோரிக்கை
சென்னை:
கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்த நீதிபதி கற்பக விநாயகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் புகார் செய்ய திமுக முடிவு செய்துள்ளது.
இது குறித்து திமுக சட்டப் பிரிவுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை கமிஷ்னர் விஜய்குமாரை நீதிபதி கற்பக விநாயகம் கேள்விகள் கேட்டது எல்லா பத்திரிக்கைகளிலும் தான் வெளி வந்தது. அதைத் தான் முரசொலியிலும் கருணாநிதி எழுதியிருந்தார்.
இதற்காக அவரை நீதிபதி கற்பக விநாயகம் கருணாநிதியை தாறுமாறாக விமர்சித்துள்ளார்.
இந்த வழக்கை கற்பக விநாயகம் விசாரிக்கக் கூடாது என அதிமுக வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் மனு தந்த நிலையில், இவ்வாறு கற்பக விநாயகம் பேசியிருக்கிறார். இதனால் அவர் தற்போது யாரையோ திருப்திபடுத்தவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் முயல்கிறார் என்று தெரிகிறது.
அவதூறு மொழிகளால் அவர் கருணாநிதியை விமர்சித்துள்ளார். இது தேவையற்றது, சம்பந்தம் இல்லாதது. நீதிபதியின் இந்தச் செயல் நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. மக்களுக்கு நீதிபதிகள் பற்றி தவறான எண்ணம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே கருணாநிதி மீது தேவையில்லமல் அவதூறு கூறிய நீதிபதி கற்பக விநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications