கருணாநிதியை பாராட்டிய கற்பகவிநாயகம்!
சென்னை:
ஜனனி ஜாமீன் வழக்கு விசாரணையின்போது திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மருமகள் சங்கீதாவின் வழக்கின்போது கருணாநிதியை பாராட்டினார்.
ஜனனி ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்த சில கருத்துக்களுக்கு, நீதிபதி கற்பக விநாயகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர். கருணாநிதியும், தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் மருமகள் சங்கீதாவின் செக்ஸ் புகார் தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் குடும்பத்தினர் தொடர்ந்துள்ள முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கற்பக விநாயகத்தின் உத்தரவுப்படி சில நாட்களுக்கு முன் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கிய பின்னர் சங்கீதாவும், அவரது கணவர் ராஜவேல் சேதுபதியும் நேற்று நீதிபதி முன் ஆஜராகினர்.
அவர்களிடம் 3 நாட்களையும் எப்படிக் கழித்தீர்கள் என்று நீதிபதி கேட்டார். அதற்கு இருவரும், நன்றாக இருந்தது என்று தெரிவித்தனர்.
அதன் பின்னர் சங்கீதாவின் மனதில் இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தால் அதையும் போக்கும் விதமாக சங்கீதாவும், ராஜவேலும் தங்களது திருமணத்தை சென்னையிலும், கலிபோர்னியாவிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன் பின்னர், சங்கீதா, ராஜவேல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சில அறிவுரைகளைக் கூறினார். சங்கீதாவும், ராஜவேலுவும் எடுக்கும் எந்த முடிவையும், அவரது குடும்பத்தினர் தடுக்கக் கூடாது, அதில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி முன் ஜாமீன் தொடர்பான வழக்கை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
விசாரணையின்போது, கருணாநிதியை கற்பக விநாயகம் பாராட்டினார். அவர் கூறுகையில், இந்த வழக்கை நான் கையாளும் முறையை திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார். திறமை மிக்க ஒருவரை திறமை வாய்ந்த ஒருவர் பாராட்டுவது பெருந்தன்மையானது. அந்த பெருந்தன்மைக்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந் நிலையில் ஜனனியின் ஜாமீன் வழக்கில் இருந்து நீதிபதி கற்பக விநாயகம் விலகிக் கொண்டதால், அந்த வழக்கை நீதிபதி சொக்கலிங்கத்திடம் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி ஒப்படைத்துள்ளார். இன்று ஜனனி வழக்கை சொக்கலிங்கம் விசாரிப்பார்.