தனிநாடு கோரவில்லை, ஆனால்.. பிரபாகரன் எச்சரிக்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகள் முன் வைத்துள்ள இடைக்கால நிர்வாக திட்டம் தனிநாடு கோரிக்கைக்கான முதல்படி என்ற இலங்கை அதிபர் சந்திரிகாவின் கூட்டணி கட்சிகள் கூறியுள்ள குற்றச்சாட்டை அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் மறுத்துள்ளார். அதே நேரத்தில் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் நாடு துண்டாகும் என்றும் எச்சரித்துள்ளார்.
புலிகள் அமைப்பு ஆண்டுதோறும் அனுசரிக்கும் வீரர்கள் வார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாங்கள் முன் வைத்துள்ள இடைக்கால நிர்வாகத் திட்டம், தனிநாடு கோரும் முயற்சியின் முதல்படியென தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தனிநாடு கோரிக்கையை நோக்கி எங்கள் செயல்பாடுகள் இல்லை.
ஆனால், சிங்கள இனவெறி அரசு தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும் நிலையைத் தொடர்ந்தால் அந்த கோரிக்கை எழுப்புவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அது போன்ற ஒரு சூழ்நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்.
நார்வே தூதுக்குழு மூலம் நாங்கள் முன் வைத்துள்ள திட்ட வரைவு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான தொடக்கம்தானே தவிர, அதுவே இறுதியானது அல்ல. அந்த திட்டம் குறித்து எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் சிங்கள அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.
சந்திரிகாவிற்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையேயான அதிகாரச் சண்டை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று அமைச்சர்களின் பதவியைப் பறித்ததற்கு சந்திரிகா ஏதோதோ காரணங்கள் கூறினாலும், எங்களது இடைக்கால நிர்வாகத் திட்டத்தை ஏற்கவிடாமல் செய்வதே அதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த இனப் பிரச்சனையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அமெரிக்கா, ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிகம் சார்ந்து வருகிறார். இதன்மூலம் எங்களுக்கு எதிராக தனது தரப்புக்கு பாதுகாப்பு கவசம் தேட முனைகிறார். இதனால் இந்தப் பிரச்சனையில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யோசனை சொல்ல ஆரம்பித்துள்ளன. இது நல்லதல்ல.
பிரச்சனையில் சர்வதேச நாடுகள் அதிகம் மூக்கை நுழைப்பதால் அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் குழப்பம் மிகுந்ததாகவிட்டது.
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி தீர்ந்தால், பேச்சுவார்த்தை தொடர்வதில் எங்களுக்கு விருப்பமே என்று பிரபாகரன் கூறினார்.
இதற்கிடையே டெல்லி வந்துள்ள ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை ஆணையர் கிறிஸ் பேட்டன் நிருபர்களிடம் பேசுகையில், நான் கிளிநொச்சியில் பிரபாகரனை 70 நிமிடம் சந்தித்துப் பேசினேன். அப்போது அமைதி முயற்சிகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதை 6 முறை பிரபாரகன் சுட்டிக் காட்டினார் என்றார்.












Click it and Unblock the Notifications