கள்ளச் சாராய சாவுகளுக்கு அரசும் போலீசுமே பொறுப்பு: மார்க்சிஸ்ட்
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கள்ளச் சாராயம் அருந்தி 15 பேர் பலியானதற்கு காவல்துறையும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விஷச் சாராயம் அருந்தி 15 பேர் இறந்திருப்பதும், 30க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஊசலாடி வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது.
தொடரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம். இதற்கு காவல்துறையும், மாநில அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தொடராமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் வறுமையைப் போக்குவதும், வேலை வாய்ப்பை அதிகரிப்பதும் கள்ளச்சாராய நடமாட்டத்தை ஒழிக்க உதவும். பொன்னேரி சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.