மாலத்தீவு சிறையில் தமிழக இளைஞர்கள்: பிரதமர் தலையிட ஜெ. கோரிக்கை
சென்னை:
மாலத்தீவுகளில் வேலைக்குச் சென்று கொலை வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இரு தமிழக வாலிபர்களையும் மீட்க பிரதமர் வாஜ்பாய் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த கமல், திருச்சியைச் சேர்ந்த சரவணன், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜன் ஆகியோர் மாலத்தீவுகளுக்கு வேலைக்காகச் சென்றனர். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
இந் நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, போலீஸார் இந்த மூவரையும் கைது செய்தனர். பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததாக இவர்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சரவணனிடம் ஒப்புதல் வாக்குமூலம் கேட்டு அந் நாட்டு சிறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கினர். இதில் சிறைச் சாலையிலேயே அவர் இறந்தார்.
மற்ற இருவரும் சாவை எதிர்நோக்கி காத்துள்ளனர். இந் நிலையில் இவர்களைக் காக்குமாறு பிரதமருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதினார். இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவும் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்:
பொய்யான வழக்கில் தமிழக இளைஞர்கள் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னொரு வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதை இந்தியா வன்மையாக கண்டிக்க வேண்டும்.
மாலத்தீவு தவிர, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் தமிழர்களைத் தாக்குவதும் அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக இந்த தமிழ் இளைஞர்களைக் காக்கவும், கொல்லப்பட்ட தமிழ் இளைஞரின் குடும்பத்தினருக்கு மாலத்தீவு அரசிடம் இருந்து உரிய நஷ்டஈட்டைப் பெற்றுத் தரவும் நீங்கள் (பிரதமர்) நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் இளைஞர்களின் பெற்றோர் எவ்வளவோ முயன்றும் இந்தியத் தூதரகமும், இந்தியாவில் உள்ள மாலத்தீவு தூதரகமும் ஒரு உதவியும் செய்யவில்லை.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள அவர் இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications