சென்னைக்கு குடிநீர்: 3 நாட்களில் முடிவு கூறுவதாக ஜெவிடம் நாயுடு தகவல்
ஹைதராபாத்:
கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகம் 3 டிஎம்சி நீரை எடுத்துக் கொள்வது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதியளித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை ஹைதராபாத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 3 டிஎம்சி தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி கோரி அப்போது நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. மேலும், சென்னை நகரில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்தும் அவர் விளக்கினார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நாயுடுவுடன் வெளியே வந்த ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், கண்டலேறு அணையிலிருந்து சென்னை நகருக்கு 3 டிஎம்சி தண்ணீரை எடுக்க அனுமதி வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். இதற்கு அவர் உடனடியாக உறுதி எதையும் அளிக்கவில்லை. யோசித்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பதில் தருவதாக தெரிவித்தார்.
கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 15 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2000ம் ஆண்டில் 3.59 டிஎம்சி தண்ணீரும், 2001ல் 3.43 டிஎம்சி நீரும், கடந்த ஆண்டு 3.260 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. கண்டலேறு அணையில் நீர் இருப்பு இல்லை என்று ஆந்திரம் தெரிவித்துள்ளது.
உண்மையில், கண்டலேறு அணையில் தற்போது வெறும் 4.1 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. கண்டலேறு தண்ணீர் கிடைத்தால்தான் சென்னை நகரை குடிநீர்ப் பஞ்சத்திலிருந்து காக்க முடியும்.
கண்டலேறு தண்ணீரை ஆந்திரம் வழங்கினால் சென்னை மக்களும், நானும் உங்களுக்கு (நாயுடுவுக்கு) மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications