587 பேர் டிஸ்மிஸ்: மீண்டும் நீதிமன்றத்தை நாட ஜாக்டோ- ஜியோ முடிவு?
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பாக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.
3 நீதிபதிகள் குழு அரசுக்கு சமர்ப்பித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையில், 587 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைத்திருந்தது.
அதன்படி 587 அரசு ஊழியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டனர். மற்றவர்கள் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலர் பதவி இறக்கம் உள்ளிட்ட தண்டனைகளுடன் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதை ஜாக்டோ ஜியோ எதிர்த்தது. அனைத்து ஊழியர்களையும் விடுவித்து விட்டு 587 பேரை மட்டும் டிஸ்மிஸ் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவரை கூட டிஸ்மிஸ் செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய இந்த அமைப்பு,
587 பேர் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கை மற்றும் பிறருக்கு விதிக்கப்பட்ட ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட தண்டனைகைளை முழுவதும் ரத்து செய்து விட்டு அனைவரையும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
அவர்களது கோரிக்கைக்கு இதுவரை அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து இன்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சென்னையில் கூடி விவாதிக்கவுள்ளனர்.
அடுத்த கட்டமாக உயர் நீதிமன்றத்தை அணுகி டிஸ்மிஸ் ஆன 587 ஊழியர்களின் வழக்குக்கு நிவாரணம் தேடுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications