தலித்கள் மீது தாக்குதல்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருமாவளவன் போராட்டம்
கரூர்:
தலித் சமுதாயத்தினர் மீதான தாக்குதலைக் கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசுகையில், கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு சம்பவத்திலும் கூட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குற்றம் செய்தவர்களைக் கைது செய்யவில்லை.
காவல்துறையும், ஆதிக்க ஜாதியினரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். உடனடியாக குற்றம் இழைத்தவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.