கெட்டுப் போன சாக்லேட்டுகள் சாப்பிட்ட 75 பள்ளி மாணவிகள் மயக்கம்
சென்னை:
கெட்டுப் போன சாக்லேட்டுகளைச் சாப்பிட்ட பள்ளி மாணவிகள் 75 பேர் மயக்கமடைந்தனர். பலருக்கு வாந்தியும் ஏற்பட்டது.
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல பூஜை நடந்தது. பூஜைக்குப் பிறகு, சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்த ஒரு ஆசிரியை கொணடு வந்த சாக்லெட்டுள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
சாக்லேட்டுகளைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவிகள் தங்களுக்கு மயக்கம் வருவதாகவும், கை, கால்கள் நடுங்குவதாகவும் ஆசிரியைகளிடம் தெரிவித்தனர். பலரும் மயங்கி விழுந்தனர். பலர் வாந்தியும் எடுத்தனர்.
தொடர்ந்து 75 மாணவிகளும் மயக்கமடைந்தனர். உடனடியாக அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. மாணவிகள் யாரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சாக்லெட்டுகள் கெட்டுப் போனதாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கருதுகினறனர். இருப்பினும் அதை 2005ம் ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்று லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இதை டாக்டர்கள் உறுதியாக கூறவில்லை.
சாக்லெட் சாப்பிட்டு மாணவிகள் மயக்கடைந்த தகவல் வில்லிவாக்கம் பகுதியில் பரவியதும், மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கும், மருத்துவமனைக்கும் படையெடுத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.