புதிய தலைமை செயலகத்துக்கு எதிரான வழக்கு: கட்டடங்களை இடிக்க 12ம் தேதி வரை தடை
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எந்தக் கட்டடத்தையும் வருகிற 12ம் தேதி வரை இடிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோட்டூர்புரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜையும் நடத்தப்பட்டு விட்டது.
இந் நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.குப்புராஜ் உள்ளிட்டவர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டுமானப் பணியோ அல்லது பழைய கட்டடங்களை இடிப்பதையோ மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தது.
இந் நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் பழைய கட்டடங்களை இடிக்க மாட்டோம் என தமிழக அரசு அளித்திருந்த உறுதிமொழியையும் வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications