மலேசியா, மாலத்தீவு: 10 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்க கோரி சென்னையில் உண்ணாவிரதம்
சென்னை:
மலேசியா மற்றும் மாலத்தீவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 10 தமிழ் இளைஞர்களை மீட்கக் கோரிசென்னையில் உலகத் தமிழர் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 தமிழர்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல,மாலத்தீவில் 2 தமிழர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்களை உடனடியாக மீட்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னைவள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
போராட்டத்தை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன், இயக்குநர்கள் வி.சேகர், ஆர்.கே.செல்வமணி,தமிழ்நாடு வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.
மாலையில் மலேசியத் தூதரக அலுவலகத்தில் கோரிக்கை மனுவை உண்ணாவிரதக் குழுவினர் கொடுக்கவுள்ளனர்.