தேர்தலுக்கு தயாராக தொண்டர்களுக்கு ஜெ. உத்தரவு
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் எந்த நேரமும் வரலாம். எனவே தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைக் குவிக்கத் தேவையான நடவடிக்கைகளில் இப்போதே இறங்குங்கள் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அருகே கொளப்பாக்கம் என்ற கிராமத்தில், மிகப் பிரமாண்டமான முறையில் அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தத் தொடங்கியுள்ளார் ஜெயலலிதா. நேற்று முதல் இந்த ஆலோசனைகள் தொடங்கின.
முதல் கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்தார். அந்த மாவட்டங்களில் கட்சி வளர்ச்சி, செல்வாக்கு, தேர்தல் வந்தால் யாருடன் கூட்டணி சேரலாம், கட்சி நர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
கட்சி நிர்வாகிகள் தங்களது குறைகளையும், ஒருவர் மீதான ஒருவரின் புகார்களையும் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.
இந்த நேர்காணல் நிகழ்ச்சியைக் காண பத்திக்கையாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே நேர்காணல் நடக்கும் பந்தலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நேர்காணல் நிகழ்ச்சியோடு மாவட்ட செயலாளர்கள் தேர்தலையும் ஜெயலலிதாவே நடத்தினார். பஞ்சாயத்து அளவிலான நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர் பதவி வரையிலான தேர்தலை ஜெயலலிதா நடத்தியதாக பெயர் வெளியிட விரும்பாத சில கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அனைவருடைய கருத்துக்களையும் மதித்து, ஒத்த கருத்து ஏற்பட்ட பிறகே நிர்வாகிகளை ஜெயலலிதா தேர்வு செய்ததாகவும் அவர்கள் கூறினர்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறு தங்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தங்களது குறைகளை பகிரங்கமாக தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பவர்களின் வசதிக்காக பெரிய பெரிய பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்களது குறைகளை எழுதி நிர்வாகிகள் போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஏராளமான புகார்கள் குவிந்ததாகத் தெரிகிறது.
இந்த நேர்காணல் மற்றும் குறை தீர்ப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும் கட்சி பிரமுகர்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகியவை அதிமுக சார்பில் இலவசமாக செய்து தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேர்காணலில் கூட்டணி குறித்து கட்சியினரின் கருத்துக்களை பொதுவாகக் கேட்டு வருகிறார் ஜெயலலிதா. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனியே போட்டியிட்டாலும் தேர்தல் முடிவைப் பொறுத்து பா.ஜ.கவுக்கு ஆதரவு தரலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications