மதிமுகவும் விலக முடிவு?: பா.ம.க. விலகாது
கோவை:
மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதையடுத்து, மதிமுகவும் விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களது நிலைப்பாடு திங்கள்கிழமை வைகோவுடன் பேசிய பின் முடிவெடுக்கப்படும் என மத்திய இணையமைச்சரும் மதிமுக பொருளாளருமான கண்ணப்பன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளரிடம் அவர் கூறுகையில்,
திங்கள்கிழமை வேலூர் சிறைக்குச் சென்று பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திப்பேன். பின்னர் மூத்த தலைவர்கள் கூடி விவாதித்து எங்கள் கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்து முடிவெடுப்போம் என்றார்.
திமுகவைத் தொடர்ந்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் யோசனை:
இதற்கிடையே, திமுகவுடன் பேச்சு நடத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றுமையைக் காக்க பா.ஜ.க. முயற்சி எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுகவின் மனக் குறைகள் நியாயமானவை. அதைப் போக்க வேண்டிய பா.ஜ.கவின் கடமை. கூட்டணியை விட்டு விலகும் அளவுக்கு நிலைமை போனது வருத்தம் தருகிறது.
பிரதமர் வாஜ்பாயும், தே.ஜ.கூ. ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசும் கருணாநிதியுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இரு தரப்பினருக்கும் பொதுவான ஒரு நிலையை ராமதாஸ் எடுத்துள்ளதால், கூட்டணியை விட்டு பா.ம.க. விலகப் போவதில்லை என்பதை ராமதாஸ் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.