பதவி விலக செஞ்சியார் மறுப்பு?: வைகோ குழப்பத்தின் பின்னணி
டெல்லி:
மதிமுகவின் சார்பில் அமைச்சராக உள்ள செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலக மறுப்பதாலேயே பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்று முடிவெடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் முதலில் கூட்டணியில் நீடிக்கலாம் என்று கூறிய அமைச்சர் கண்ணப்பன் இப்போது விலகிவிடலாம் என்று கூறுவதாகத் தெரிகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட திமுக எளிதாக காங்கிரசுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது.
ஆனால், புலிகள் ஆதரவாளர்கள் என்று சொல்லி மதிமுகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் மறுத்தால் தமிழகத்தில் தனித்து விடப்படுவோம் என்று செஞ்சியார் கூறுவதாக தெரிகிறது. மேலும் திமுகவை கண்ணை மூடிக் கொண்டு பாலோ செய்ய வேண்டியதில்லை என்பது அவரது கருத்தாக உள்ளதாம்.
பொடாவில் நாம் கூறிய திருத்தத்தை துணைப் பிரதமர் அத்வானி கொண்டு வந்துவிட்டார். மேலும் பொடா மறு ஆய்வுக் குழு மூலமாக வைகோவை விடுவிக்கவும் மத்திய அரசு முழு மனதுடன் உதவ ஆரம்பித்துள்ளதாகவும், இந் நிலையில் கூட்டணியை முறிக்க வேண்டாம் எனவும் செஞ்சியார் கூறுவதாகத் தெரிகிறது.
ஆனால், அவைத் தலைவர் எல்.கணேசன் மற்றும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டணியை விட்டு விலகிவிட வேண்டும் என்பதில் தீவிரமாய் இருப்பதால் வைகோ குழம்பிப் போயுள்ளார் என்கிறது மதிமுக வட்டாரம்.
அதே நேரத்தில் வைகோவை பொடா மறு ஆய்வுக் குழு விடுவித்த பின் கூட்டணியை கை கழுவுவதே நல்லது என்று அமைச்சர் கண்ணப்பன் கூறுகிறாராம். இதில் அவசரம் வேண்டாம் என்று நினைக்கிறார் கண்ணப்பன்.
தனிப்பட்ட முறையில் திமுகவுடன் செல்வதே உகந்தது என வைகோ கருதினாலும் இது குறித்து முழு அளவில் விவாதம் நடத்தியே எந்த முடிவையும் எடுக்குமாறு கணேசனுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை வரும் 29ம் தேதிக்கு மதிமுக கூட்டியுள்ளது. கூட்டம் நடக்கப் போவது 29ம் தேதி என்றாலும் இப்போதே தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் கணேசன் இன்பார்மலாக ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டார்.
அதே நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியே வருமாறு திமுக தலைவர் கருணாநிதியிடம் இருந்து வைகோவுக்கு தனிப்பட்ட செய்தி போய்ச் சேர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏப்ரலில் மக்களவை தேர்தல்:
இதற்கிடையே சமீபத்தில் தனக்குக் கிடைத்த வட மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு மக்களவைத் தேர்தலை முன் கூட்டியே சந்திக்க பா.ஜ.க. கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அடுத்த வாரம் கூடும் பா.ஜ.கவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications