புலிகளால் தமிழக மீனவர்களுக்கு கொடுமை: கடலோர காவல்படை தகவல்
சென்னை:
இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் புகுந்தபோது அவர்களை விடுதலைப் புலிகளின், கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்று கொடுமைப்படுத்தியதாக இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டர் கமோடர் உதய் நாராயண் சிட்னவிஸ் கூறியுள்ளார்.
கிழக்குப் பிராந்திய புதிய கமாண்டராக பொறுப்பேற்றுள்ள சிட்னவிஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை கடல் புலிகள் கடத்திச் செல்லவில்லை. இருப்பினும், தமிழக மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்தபோது அவர்களை கடல் புலிகள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களிடம் சற்று கடுமையாகவும் அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். இருப்பினும் கடல் புலிகள் இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவுவதில்லை. இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும்போதுதான் நமது மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
கச்சத் தீவு மற்றும் முல்லைத் தீவு பகுதிகளுக்கு நமது மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்களை கடல் புலிகள் மடக்குகிறார்கள். இந்தியர்கள் அல்லது இந்திய உளவுத் துறையினர் என்ற சந்தேகத்தில் நமது மீனவர்களை புலிகள் பிடித்துச் செல்கிறார்கள்.
கடல் புலிகளை கட்டுப்படுத்த வேண்டியது இலங்கை அரசுதான். அவர்களது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட இந்தியா விரும்பவில்லை.
10 நாட்களுக்கு ஒரு முறை எத்தனை தமிழக மீனவர்கள் பிடிபட்டுள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசு நமக்கு அனுப்பி வைக்கிறது. பிடிபடுபவர்கள் முடிந்த அளவுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications