மலேசியாவில் 8 தமிழர்களுக்கு மரண தண்டனை இல்லை: யஷ்வந்த் சின்ஹா விளக்கம்
சென்னை:
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 தமிழக இளைஞர்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி, கணேசன், விஜயன், சமயமுத்து, திருச் செல்வம், இளங்கோவன், துரைராஜ், கருப்பையா ஆகிய 8 இளைஞர்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வேலைக்குச் சேர்ந்தனர். அங்கு போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
8 பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதால் ராமநாதபுரத்திலும், தமிழகத்திலும் பதற்றம் உருவானது. 8 இளைஞர்களையும் காக்கக் கோரி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கைகள் பறந்தன. முதல்வர் ஜெயலலிதாவும், இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய், யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: தமிழகத்தைச் சேர்ந்த 8 தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
இன்னும் அவர்கள் மீதான வழக்கில் விசாரணையே தொடங்கவில்லை. எனவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. கடந்த ஏப்ரல் 25ம் தேதி இந்த 8 பேரும் கோலாலம்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறையான சுற்றுலா ஆவணங்கள் இல்லாததாலும், 159 கிராம் ஹெராயின் வைத்திருந்ததாகவும் கூறி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வெளியுறவுத் துறைக்கு அனுப்புமாறு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,8 தமிழர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறும் உத்தரவிட்டுள்ளேன்.
இதுதவிர, மலேசியாவில் வேலைக்காக சென்று அங்கு சரியான வேலையும், உரிய சம்பளமும் கொடுக்காமல் 10 தமிழ் மற்றும் 6 தெலுங்கு இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தாங்கள் எழுதியிருந்த கடிதம் குறித்தும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது.
தற்போது அந்த இளைஞர்களின் பிரச்சினையை சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், மலேசிய தொழில் அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். விரைவில் இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞர்களின் பிரச்சினைகளைக் கவனிப்பதற்காக அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் போதுமான அளவில் உள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு உதவ இந்தியத் தூதரகங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதை வெளியுறவுத் துறை விரும்பவில்லை என்று கூறியிருந்தார் சின்ஹா.












Click it and Unblock the Notifications