பொடா நீதிமன்றத்தில் நெடுமாறனின் ஜாமீன் மனு நிராகரிப்பு
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் ஜாமீன் மனுவை பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் அவரால் ஜாமீனில் விடுதலை ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நெடுமாறனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதேபோல, திண்டுக்கல் சார்பு நீதிமன்றம் நெடுமாறனுக்கு ஜாமீன் கொடுத்தது. ஆலந்தூர் சார்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டியிருந்தது.
இந் நிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நெடுமாறன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி திடீரென்று மாற்றப்பட்டார். பூந்தமல்லி 2-வது அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு நெடுமாறன் வழக்கறிஞர் அறிவுறுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பூந்தமல்லி 2-வது கூடுதல் அமர்வு நீதிபதி மரகதத்தின் முன்பு ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், நெடுமாறனை வெளியே விட்டால் சாட்சியங்களைக் கலைத்து விடுவார் என்றார்.
அதற்குப் பதிலளித்த நெடுமாறன் தரப்பு வழக்கறிஞர், கடந்த 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. விசாரணையைத் தொடங்குவதற்கு அரசுத் தரப்பிலிருந்து எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
டிசம்பர் 29ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் கூட இன்னும் சாட்சிகளுக்கு சம்மன் கூட அனுப்பாமல் அரசுத் தரப்பு உள்ளது. எனவே நெடுமாறனை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது, சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பும் பணி நடந்து காண்டிருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நெடுமாறனின் ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி மரகதம் உத்தரவிடடார்.
இந்த உத்தரவை எதிர்த்து வருகிற திங்கள்கிழமைதான் நெடுமாறன் மேல் முறையீடு செய்ய முடியும்.