கருணநிதியுடன் வெங்கடேச பண்ணையாரின் மனைவி சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார், சில மாதங்களுக்கு முன் சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடார் சமுதாயத்தினடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை பெரிய தாதா என்று அப்போதைய கமிஷ்னர் விஜய்குமார் வர்ணித்தார். ஆனால், கேரளத்தைச் சேர்ந்த மோசடி நிதி நிறுவனத்தின் ஆட்கள் கொடுத்த புகாரை வைத்து பண்ணையாரை விஜய்குமார் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகவும், இதில் விஜய்குமாரின் மலையாள இனப் பாசம் வெளிப்பட்டதாகவும் நாடார் சமுதாயத்தினர் கூறுகின்றனர்.
நாடார் சமுதாயத்தினரின் கடும் வெறுப்புக்கு உள்ளான விஜய்குமாரை, இந்து பத்திரிக்கை விஷயத்தில் ஏற்பட்ட வெறுப்பினால் சமீபத்தில் மாற்றினார் முதல்வர் ஜெயலலிதா.
பண்ணையாரின் சாவு குறித்து சிபிஐ விசாரணை கோரி நாடார் இனத் தலைவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இது குறித்து துணைப் பிரதமர் அத்வானியிடம் அவர்கள் மனு கொடுத்தபோது பிடி கொடுக்காமல் பேசி திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் இந்த விஷயத்தில் ஜெயலலிதா அரசின் செயல்பாட்டை குறை கூறிய நாடார் சமூகத்தினரையும் முகத்தில் அடித்தார் போல் பேசி அனுப்பினார்.
இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராதிகா பேசுகையில், எனது கணவர் கொலை செய்யப்பட்டதும் அதற்கு முதன் முதலில் கண்டனம் தெரிவித்தவர் கலைஞர்தான். மேலும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
எனது கணவர் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications